நஜீப் பின் கபூர்
நன்றி:26.07.2026 ஞாயிறு தினக்குரல்
‘சஜித் பலயீனமானவர்தான்
ஆனாலும் எதிரணிக்கு
ஆளைவிட்டால் கண்ணுக்கு
எட்டிய தூரத்தில் வேறு
தெரிவுகள் கிடையாது.
எனவே மனிதனைப் பாதுகாக்க
வேண்டிய தேவை இருக்கின்றது.’

இந்தக் கட்டுரைக்குள் பிரவேசிக்கும் முன்னர் ஒரு சிறு குறிப்பை சொல்லி வைக்க விரும்புகின்றோம். நாட்டில் அந்தரங்கத்தில் என்ன நடக்கின்றது என்பதனை சராசரி மனிதர்கள் அறியமாட்டார்கள். அனேகமாக தனது வாழ்நாளில் அவர்கள் இங்குள்ள அரசியல் சூது-வாதுகளை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு நிலை இதுவரை இருந்து வந்திருக்கின்றது. அதனால்தான் நாடு இந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு வந்தது.
ஊழல் மிகுந்த அரசியல். பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடும் அரசியல்வாதிகளும் அவர்களது கையாட்களும் குபேரர்களாக வாழவைக்கின்ற தேசம். மனிதர்களைக் கொன்று குவித்து அதிகாரத்தை கைப்பற்றும் கொடூரம். குற்றவாளிகள் போதை வியாபாரிகள் பாதாள உலகத்தாருடன் நெருக்கமாக இருந்து காசு சம்பாதிக்கும் ஒரு உத்தியோகப் பற்றற்ற நிருவாகக் கட்டமைப்பு.
குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு-சலுகை அவர்களை கொல்வதற்கும் உயிர் வாழ இடமளிப்பதற்கும் கூட கப்பம் வாங்குகின்ற அரசியல் தலைமைகள் அமைச்சர்கள் அதிகாரிகள். நீதி அமைச்சரும் அவரது பிள்ளைகளும் தந்தையின் பதவி பட்டங்கள் அதிகாரங்களை வைத்து கப்பம் வாங்கி மிதமிஞ்சிய வசதி வாய்ப்புக்களை குவித்துக் கொள்ளும் ஒரு வியூகம் நமது அரசியலில் புரையோடிப்போய் இருந்தது என்பது இன்று பகிரங்கமாக மக்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.
சமகாலத்தில் இந்த விடயங்களில் மக்கள் விளிப்படைந்திருக்கின்றார்கள். இதன் பின்னர் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம், மக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கலாம் என்று எதிர்பார்க்க முடியாது. என்றாலும் அந்த முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகின்ற ஒரு கூட்டம் இன்றும் நாட்டில் இருக்கின்றது என்பதனை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் உளவுத்துறை நிபுணர்கள் கிடையாது. ஆனால் நாட்டில் நடக்கின்ற சில காட்சிகளை-சம்பவங்களை வைத்து என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள எமக்கு ஒரு புரிதல் இருக்கின்றது என நாம் நம்புகின்றோம். இதனை ஏற்றுக் கொள்வதற்கும் நிராகரிப்பதற்குமான உரிமை வழக்கம் போல வாசகர்களுக்கு இருக்கின்றது. இந்த நாட்டில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அனுரகுமர திசாநாயக்க பிற்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றார்.
அத்துடன் அவர்களது கடும் போக்கு அரசியல் பின்புலம் செயல்பாடுகள் உழைப்பு என்பன இதில் இருக்கின்றது. இதனால் ஜனாதிபதி அனுராவுக்கு நிறையவே அரசியல் எதிரிகள் இருக்கின்றார்கள். அது உயிராபத்து என்ற நிலைக்கும் போகலாம். இதனை நாம் மட்டுமல்ல நிறையவே அரசியல் விமர்சகர்கள் ஜனாதிபதியையும் பாதுகாப்புத் துறையினரையும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றோம்.
அதே போன்று நமது நாட்டில் இரண்டாவது பெரிய செல்வாக்குள்ள அரசியல்வாதி சஜித் பிரேமதாச. அவர் பற்றியும் நமக்கு நிறையவே விமர்சனங்கள் இருக்கின்றன. அவரையும் நமது அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றிவிட பல்வேறு தரப்பில் இருந்து முயற்சிகள் நடந்து வருகின்றன. அவரது தந்தை ஆர். பிரேமதாச செல்வாக்கான அரசியல் தலைவராக வளர்ந்து வருகின்ற நேரத்தில் இந்த நாட்டில் இருக்கின்ற மேல்குடி அரசியல் குடும்பங்களில் இருந்து அவருக்கு எதிரான சதிகள்- நம்பிக்கை இல்லாப் பிரரேரணை எல்லாம் சொந்தக் கட்சியிலே வந்தது. இவற்றை நாடு அறியும்.
ஆனால் ஆர்.பிரேமதாச செல்வாக்கான அரசியல் தலைவராக மட்டுமல்ல கீழ்மட்ட மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார். அவருக்கு கட்சியில் நம்பிக்கையான கையாட்கள் இருந்தார்கள். முதுகில் குத்தியவர்களும் இருந்தார்கள். ஆர்.பிரேமதாச ஆளுமையுடன் ஒப்பு நோக்கும் போது சஜித் மிகப் பலயீனமான நிலையிலே இன்று இருக்கின்றார்.

இப்போது இந்த நாட்டில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பற்றி சுருக்கமாக சிறு விளக்கமொன்றை நாம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இந்தக் கட்டுரையில் நாம் எதிர்க் கட்சித் தலைவர் பற்றி மட்டுமே ஆராய இருக்கின்றோம். அவருக்கு எதிரான சதிகள் பற்றி மட்டுமே நாம் இங்கு பேச எதிர்பார்க்கின்றோம். சஜிதிடம் தற்போது நாம் பார்க்கின்ற மிகப் பெரிய பலயீனம் அனைத்துத் துறைகளிலும் தன்னிடம் மிகப் பெரிய பாண்டித்தியம் அறிவு இருக்கின்றது என்று காட்டிக் கொள்ள வார்த்தைகளை உபயோகிக்கின்ற போது இடத்துக்கும் களத்துக்கும் பொருத்தமில்லாத வசனங்களை அவர் உச்சரிக்கின்றார்.
அதற்காக அவர் நீண்ட பட்டியல்களையும் அங்கு முன்வைக்கின்றார். ஆனால் அவருக்கு இவை விவகாரங்களில் போதிய அறிவு கிடையாது என்பதை இந்த நாட்டு மக்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அதனால்தான் அவரது இந்த பேச்சுக்கள் எடுபடாமல் போகின்றது. அத்துடன் தனது அணியில் இருக்கின்ற துறைக்குப் பொருத்தமானவர்களுக்கு வாய்ப்பை வழங்காது தானே துறையில் பாண்டியத்தை காட்சிப்படுத்த முனைவது நாகரிகமானதாக நமக்குத் தெரியவில்லை. அதனால் அவர் பல இடங்களில் கோமாளியாகி விடுகின்றார்.
இப்போது சஜித்துக்கு எதிரான சதிகள் என்ன என்பதனை பார்ப்போம். ஐதேக.வில் ரணிலுக்கு அடுத்த படியாக இருந்த செல்வாக்கான தலைவர் சஜித் பிரேமதாச. ஆனால் ரணில் அவரை மதிக்கவே இல்லை. அப்போது நாட்டில் இருந்த தனது அரசியல் எதிரிகளான சந்திரிகா-மஹிந்த போன்றவர்களுடன் ஒப்பு நோக்கும் போது ரணில் கவர்ச்சியில்லாத தலைவராகவே இருந்தார். அவரால் நாம் மேற்சொன்ன தலைமைகளுடன் ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் தொடர் தோல்விகள். கட்சியில் தனக்கு எதிர்ப்பு வளர ரணில் செயற்குழு மத்திய குழு என்ற அனைத்திலும் தனது கையாட்களை குவித்துக் கொண்டார். அதற்காக அவர் கட்சியில் தனக்குத் தேவையானவர்களை உள்ளே எடுத்துக் கொள்ள விசேட சலுகைகளை யாப்பு மூலம் உருவாக்கிக் கொண்டார்.
தொடர்ச்சியாக தனக்கு எதிரான விமர்சனங்களின் போது தனது இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு ரணில் அங்கே ஒரு சர்வாதிகாரியாக அடக்குமுறையுடன் பல நடவடிக்கைகளை கட்சியில் மேற்கொண்டு வந்தார். இப்படி இவருடன் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று தெரிந்ததால் ஒரு கட்டத்தில் ரணிலின் ஐதேகவில் இருந்து சஜித் தனிக்குடித்தனம் போனார்.
ரணில் ஐதேக. அதிகாரத்தில் இருக்கும்வரை அவருக்கு ஜால்ரா போட்ட பல முக்கிய தலைவர்களும் கூட சஜித்தின் புதுக் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் வந்து இணைந்தார்கள். அப்போதுதான் தெரிய வந்தது நாட்டில் மக்கள் மத்தியில் ரணிலுக்கு என்ன செல்வாக்கு என்பது. இன்று அந்தக் கட்சிக்கு நாடாளுமன்றில் ஒரு ஆசனங்கள் கூட இல்லாத நிலை என்பதால் மக்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
பின்னர் தனக்கு நாடாளுமன்றத்தில் இருந்த ஒரு சில கையாட்களை வைத்து அவர் ராஜபக்ஸாக்களின் நலன் காக்கின்ற ஜனாதிபதியாக சில காலம் பதவியில் இருந்ததை; தொடர்ந்து சம்பிரதாய வலதுசாரிகளின் கடும் வெறுப்புக்கு ரணில் ஆளாகி இன்று களத்தில் வங்குரோத்து அரசியல்வாதியாக நிற்கின்றார். அவர் அதிகாரத்தில் இருந்த காலத்தில் கூட சஜித்துக்கு இரண்டாம் இடத்தை கொடுப்பதை அவர் ஜீரணிக்கவில்லை. அதனால்தான் கட்சி பிளவு பட்டது.
ஜேஆர். காலத்தை போலவே தனது உறவினரான ருவன் விஜேவர்தனாவை அவர் இரண்டாம் இடத்துக்குக் கொண்டுவர முயன்றார். ஆனால் அந்த ருவன் கட்சிகாரர்கள் மத்தியில் எடுபடவில்லை. இந்தப் பின்னணியில் தனது அரசியல் தலைமைத்துவத்துக்கு வேட்டு வைத்து இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் மீது ரணிலுக்கு மிகப் பெரிய கோபம் இருக்கின்றது.
அதே போன்று தற்போது கட்சியில் இருக்கின்ற வஜிர-ராஜித-நவின்-ருவன் போன்றவர்கள் ஐதேக-சஜித்துடன் இணைந்தாலும் நாம் இரண்டாம் தரப்பிரசையாகத்தான் பார்க்கப்படுவோம் என்பதளை அறிந்து வைத்திருப்பதால் எப்படியும் நாம் முதலில் ஐமச. இணைவதாக இருந்தால் அந்தக் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் சஜித்துக்கு எதிராக சதிவேலைகளை இன்று செய்து வருகின்றார்கள். இது கல்லில் நார் உரிக்கின்ற ஒரு வேலையாக இருந்தாலும் அவர்கள் அந்த முயற்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டு வருகின்றார்கள். அதற்கு சஜித் அணியில் இருக்கின்ற சிலரது ஒத்துழைப்பும் கிடைத்து வருகின்றன.
அதே போன்று தற்போது நமது அரசியல் அரங்கில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சஜித்தான் நமது உண்மையான அரசியல் எதிரி. நாம் ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக இருந்தால் முதலில் சஜித்துக்கு இருக்கும் இரண்டாம் நிலையை சிதைக்க வேண்டும். இது நாமல் தரப்பு எதிர்பார்ப்பு. மக்கள் மத்தியில் அண்மையில் மாற்றுக் கருத்துக்களுக்கான மையம் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் ஜனாதிபதி அனுர மீதான ஆதரவு பொதுவாக 75.5.சதவீதம். எதிர்க் கட்சித் தலைவர் செல்வாக்கு 29.4 என்று இருக்கின்றது. அந்தவகையில் மொட்டுக் கட்சியினரின் பிரதான அரசியல் எதிரி அனுராவல்ல சஜித் என்பதும் அரசியல் அறிவுள்ளவர்களுக்குப் புரியும்.
இது ராஜபக்ஸாக்களின் குறுகிய நீண்ட கால எதிர்பார்ப்புமாக இருக்கின்றது. அதனால்தான் ஆளும் தரப்பை விடவும் மொட்டுக் கட்சியினர்தான் சஜித்தை இன்று ஜோக்கராக்க-கேவலப்படுத்த-அவமானப்படுத்த அதிக காசு செலவு செய்கின்றாhகள். அரசியலில் இது அவர்களின் தேவையும் அவர்கள் பக்க நியாயமும் கூட. கடந்த பொதுத் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு வெறும் 2.5 சதவீதம். அதனால்தான் நாமல் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம்வர வேண்டிய அவல நிலை வந்தது. ராஜபக்ஸாக்களுக்கு நாட்டில் பெரும் செல்வாக்கு என்றால் ஏன் இந்த அவமானம். இதில் ஒரு முன்னேற்றம் அவர்களுக்கு தேவை. அந்த முயற்சிக்காக அவர்கள் இன்று சஜித்துக்கு எதிரான சதிகளில் இறங்கி இருக்கின்றார்கள்.
மேலும் திலித் சம்பிக்க தயாசிரி போன்றவர்களும் தமக்குச் சாதகமாக களம் அமைவதாக இருந்தால் களத்தில் இருந்து சஜித்தை வெளியேற்ற வேண்டும். அல்லது அவரைப் பலயீனப்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிரணி பொது வேட்பாளர் என்பதைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியும். அதனால் அவர்களும் சஜித்துக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் சில சதிவேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். என்னதான் குற்றங் குறைகள் இருந்தாலும் இந்த அனுரவின் என்பிபிக்கு எதிரான மிகப் பெரிய சக்தி ஐமச.சஜித்தான்.
இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் என்பிபி.61.56 சதவீத வாக்குகளைப் பெற்ற போது சஜித் தலைமையிலான ஐமச. 17.66 சதவீதமான வாக்குகளையே பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் நாம் மேற்சொன்ன கருத்துக் கணிப்புக்களை வைத்து ஆராய்கின்ற போது சஜித் செல்வாக்கு 29.4 சதவீதம் என்பது ஒரு ஆரோக்கியமான நிலையாகத்தான் நமக்குத் தெரிகின்றது. அவரது இந்த செல்வாக்கை வீழ்த்தி எதிர்க்கட்சிக்குள் அவரைப் பலயீனப்படுத்த வேண்டிய தேவை ஆளும் கட்சிகளை விட எதிர்க் கட்சிகளுக்குத்தான் இருக்கின்றது என்பது நமது தர்க்கமாக இருக்கின்றது.

நமது பார்வையில் அரசியல் களத்தில் சஜித்துக்கு எதிரான தாக்குதல் முக்கோண வடிவில் இருக்கின்றது. 1.பொதுவாக ஆளும் கட்சி அவரை எதிர்ப்பது ஒரு சம்பிரதாய நிகழ்வுதன். ஆனாலும் அதில் பெரிய ஆபத்துக்கள் இல்லை. 2.ஏனைய எதிர்க் கட்சியில் இருக்கின்ற சில்லறைகள் அவரை வீழ்த்தி அரசுக்கு எதிரான பிரதான எதிர்க் கட்சியாக தம்மை வளர்த்துக் கொள்ள முனைவதும் ஒகே. 3.ஆனால் உள்ளே இருந்து சஜித்துக்கு எதிராக செயல்படுவோர்தான் மிகவும் ஆபத்தானவர்களாக இருக்க முடியும்.
உள்ளே இருப்போரில் தேர்தல் வெற்றிக்காக உள்ளே வந்து அது முடிந்த கையோடு கறிவேப் பிலைபோல சில தலைவர்கள் சஜித்தை பாவிக்கின்றார்கள். மேலும் ஐமச. சிலர் ரணில் விசுவாசிகளும் சஜித்தின் முதுகில் குத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனவே ஐமச-ஐதேக. இணைகின்ற விவகாரத்தில் சஜித் மிகுந்த எச்சரிக்கையுடன் காய் நகர்த்த வேண்டி இருக்கின்றது. அதே நேரம் ரணில் தலைமையிலான ஐதேகயுடன் என்ன பேரம் பேசுவதற்கு வாக்குகளாக அவர்களிடத்தில் இருக்கின்றது. அவர்கள் உள்ளே வந்து நிச்சயம் சஜித்துக்கு தலைவலி கொடுப்பார்கள்.
அனுராவும் என்பிபி. யினரும் மிகவும் வலுவாக இருக்கின்றார்கள். ஜனாதிபதி அனுர மீதான பேரின மக்கள் 70. முஸ்லிங்கள் 93. மலையக மற்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் மத்தில் 94. சதவீத நல்லெண்ணம் இருப்பதாக நாம் மேற்சொன்ன கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் எதிர்க் கட்சிகள் சஜித்தை அந்தப் பதவியில் இருந்து வெளிய தள்ளிவிட்டு யாரை கொண்டு வந்து நிறுத்தப் போகினறது.? எனவே ஆளும் தரப்பில் அனுர இருப்பதைப்போல எதிரணியில் சஜித் பலமாகத்தான் இருந்து வருகின்றார். ஆனாலும் அவருக்கு எதிரான சதியில் பிரபுத்துவ அரசியல்வாதிகளும்.’மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் பொது ஜனாதிபதி வேட்பாளராக கனவு காண்போருமே இருக்கின்றார்கள்.
‘சஜித் பலயீனமானவர்தான் ஆனாலும் எதிரணிக்கு ஆளை விட்டால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வேறு தெரிவுகள் கிடையாது. எனவே மனிதனைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.





