சஜித்-தலையணை ஏன் இப்படி?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மட்டக்களப்புக்கு சென்ற வேளையில், அவருடைய பயணம் தொடர்பிலும் ஊடகவியலாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் தொடர்பிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பொதுவாக ஒரு நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பது வழமை. ஆனால், அதனை கூட பொருட்படுத்தாமல் “என்னுடைய கதையை கேட்டுக் கொள்ளுங்கள்… நன்றாகவே கேட்டுக் கொள்ளுங்கள்” என்று சிங்கள மொழியில் ஊடகவியலாளர்களிடம் அடாவடித்தனமாக பேசிய விதம், ஊடகவியலாளர்களை மட்டுமல்லாது, அங்கிருந்த பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இது மட்டுமல்லாது, இயல்பாகவே வாகன பயணங்களின் போது, சில ஏற்பாடுகள் செய்வது வழமை. ஆனால், சஜித் பிரேமதாச தனது வாகனத்துக்குள் தலையணை வைத்திருந்தது மட்டுமல்லாது, அவர் ஏறும் வாகனத்தில் அதனைத் தாங்கிக் கொள்வதற்கு அவரது மெய்ப்பாதுகாவலரை பயனபடுத்தியிருந்தமையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், அரச ஊதியம் பெறும் ஒருவர் சஜித் பிரேமதாசவின் தலையணையை பிடிப்பதா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதேபோல, அண்மையில் நாடாளுமன்றில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில், மெத்தை மற்றும் கதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியது.

குறித்த பொருட்கள் தனியார் நிறுவனம் ஒன்றினால் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் புத்திக பத்திரண நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பான ஆவணங்களை சபையில் சமர்ப்பித்த அவர், இருவர் தூங்கக்கூடிய கட்டில் – மெத்தை மற்றும் கதிரைகள் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டதாக சுட்டிக்காட்டினார். தனியார் நிறுவனத்தினால் இந்த பொருட்கள் எதற்காக வழங்கப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு கட்டில் – மெத்தை மற்றும் கதிரைகள்  கொண்டு செல்வதும் சஜித் பிரேமதாசவை போன்ற அரசியல் தலைவர்களுக்கு தலையணை பிடிப்பதும் எந்த அளவிற்கு நியாயம்.

இலங்கை நாட்டில் அரசியல் நடவடிக்கைகளில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை என்றே கூறவேண்டும்.

Previous Story

எதிரும் புதிருமான வாதம்!

Next Story

ஹக்கீமுக்குப் பறந்த செய்தி!