தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. வடகொரியாவுக்குள் ஆளில்லா விமானங்களை அனுப்பி, அதன் மூலம் நாட்டில் ஒரு போர் பதற்றத்தை உருவாக்கியது, ராணுவ ஆட்சி பிரகடனத்தை நியாயப்படுத்த முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

என்ன நடந்தது
2024ஆம் ஆண்டு தென் கொரியாவில் அதிபராக இருந்த யூன் சுக் இயோல் திடீரென ராணுவச் சட்டத்தை அறிவித்தார். இது அந்நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சட்டத்தின் மூலம் நாட்டின் நாடாளுமன்றத்தை முடக்க அவர் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தச் சூழலில், அவர் எதற்காக ராணுவ சட்டத்தைக் கொண்டு வந்தார் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அவர் திட்டமிட்டு வடகொரியாவுக்குள் ட்ரோன்களை அனுப்பி, இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளப்போவது போன்ற ஒரு போலிச் சூழலை உருவாக்க முயன்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
30 ஆண்டு சிறை
விசாரணை முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. அதில் வடகொரியாவுக்குள் ட்ரோன்களை அனுப்பிய குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பைக் குலைத்தது மற்றும் போர்ச் சூழலைச் செயற்கையாக உருவாக்க முயன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தை முடக்க முயன்ற வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வழங்கப்பட்டுள்ள 30 ஆண்டு தண்டனை அதனுடன் கூடுதலாகச் சேர்கிறது.
குற்றச்சாட்டுகள்
யூன் சுக் இயோல் மீது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதாவது அவர் தனது அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்க, வடகொரியாவுடன் போர் வரப்போகிறது என்ற அச்சத்தை மக்களிடையே உருவாக்க அவர் முயன்றுள்ளார்.
மேலும், அவர் அனுப்பிய ட்ரோன்கள் வடகொரியாவில் விழுந்து நொறுங்கியபோது, தென் கொரிய ராணுவத்தின் ரகசியத் தகவல்கள் மற்றும் அதன் வலிமை குறித்த விவரங்கள் கசிந்தன. இது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததாகவும் வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர்.
நிலைமை மோசம்
அவரது இந்த செயல்கள் ஏற்கனவே பதற்றமாக இருக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை இந்த நடவடிக்கை மேலும் மோசமாக்கியது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை யூன் சுக் இயோலின் வழக்கறிஞர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
அவரது தரப்பு இது தொடர்பாகக் கூறுகையில், “அந்த ஆண்டு வடகொரியா குப்பைகளை ஏந்திய பலூன்களை தென் கொரியாவுக்குள் அனுப்பியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. இது ஒரு தற்காப்பு நடவடிக்கை மட்டுமே
ட்ரோன் நடவடிக்கைக்கும், ராணுவச் சட்டப் பிரகடனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அரசுத் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் வெறும் கற்பனையானவை மற்றும் ஆதாரமற்றவை” என்று அவர்கள் வாதிட்டனர். ஆனாலும், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது. ஆனாலும், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக யூன் அறிவித்துள்ளார்.
வருத்தம்
யூன் சுக் இயோலுக்குப் பிறகுத் தென் கொரியாவின் அதிபராகப் பொறுப்பேற்ற லீ ஜே மியுங், இந்த ட்ரோன் விவகாரம் குறித்துத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்குள் ட்ரோன்களை அனுப்பியது தவறு என்று அவர் ஒப்புக்கொண்டார். லீ ஜே வருத்தம் தெரிவித்துள்ளதை வடகொரியா வரவேற்றுள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இன்னும் சுமுகமாகவில்லை.





