ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் மாத்தறை மேயர் ரஞ்சித் யசரத்னவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாத்தறை மாநகர சபைக்கு சொந்தமான கொட்டவிலவத்த என்ற 5 ஏக்கர் காணியை ஜனாதிபதியின் எழுத்துமூல அனுமதியைப் பெறாமல் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க மாத்தறை மேயர் நடவடிக்கை எடுத்தமையே இதற்கு காரணமாகும்.
மாநகர சபைகளுக்குச் சொந்தமான காணிகள், சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கு முன்னர் ஜனாதிபதியின் எழுத்துமூல அனுமதி பெறப்பட வேண்டியது கட்டாயமாகும்.
மாநகர சபை கட்டளைச் சட்டத்திற்கமைய, மாநகர சபையொன்றுக்கு சொந்தமான காணி அல்லது சொத்தை குத்தகைக்கு வழங்குவதற்கு ஜனாதிபதியின் எழுத்துமூல அனுமதி பெறப்பட வேண்டுமென பிரதி உள்ளூராட்சி ஆணையாளர் சேனக பல்லிய குருகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாத்தறை மேயர் இவ்வாறு தமக்கு வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மாத்தறை மேயர் ரஞ்சித் யசரத்னவிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.