கழிவறையில் டிரம்ப் அழித்த ஆவணங்கள்!

-யூசுப்-

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மகளை முக்கிய அரசு பொறுப்பிலிருந்து நீக்க நினைத்தார், மேலும் அரசு ஆவணங்களை கழிவறையில் போட்டு ‘ஃபிளஷ்’ செய்தார்.
டிரம்ப்

இதுபோன்ற இன்னும் பல ஆச்சரியகரமான, முன்பு அறிந்திராத தகவல்கள் பல, நியூயார்க் டைம்ஸ் ஊடகவியலாளர் மேகி ஹேபர்மேனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கான்ஃபிடன்ஸ் மேன்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகியுள்ளது.

டொனால்டு டிரம்ப் நியூயார்க் தொழிலதிபராக இருந்த காலம் முதல் அமெரிக்க அதிபர் பதவிக்கு பின்னான வாழ்க்கை வரை இந்த புத்தகம் அவரை பின் தொடர்ந்துள்ளது. டிரம்பின் முன்னாள் உதவியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரின் பேட்டிகள், டிரம்ப் உடனான மூன்று பேட்டிகள் அடங்கிய தகவல்களுடன் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

ஹேபர்மேனை தன்னுடைய சமூக ஊடக தளத்தில் விமர்சித்துள்ள டொனால்டு டிரம்ப், இந்த புத்தகம், “எவ்வித உண்மை சரிபார்ப்பும் இன்றி, பல புனைவு கதைகளை” கொண்டுள்ளதாக எழுதியுள்ளார்.

இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டிரம்ப் குறித்த எட்டு முக்கிய தகவல்கள்:

1) இவான்கா மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை பணிநீக்கம் செய்ய விரும்பினார் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அரசியல் ஆலோசகர் ஜான் கெல்லி மற்றும் முன்னாள் சட்ட ஆலோசகர் டான் மெக்கான் உடனான கூட்டம் ஒன்றில், அரசின் மூத்த ஆலோசகர் பொறுப்பில் உள்ள தன் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் இருவரும் தங்கள் பணியிலிருந்து விலகியதாக டிரம்ப் கிட்டத்தட்ட ட்வீட் செய்யும் நிலைக்குச் சென்றதாக, ஹேபர்மேன் எழுதியுள்ளார்.

ட்வீட் பதிவிடுவதற்கு முன்னர், இவான்கா மற்றும் குஷ்னர் இருவரிடமும் முதலில் பேசுமாறு ஆலோசனை வழங்கி தடுத்து நிறுத்தியுள்ளார் கெல்லி. ஆனால், இருவரிடமும் டிரம்ப் கடைசிவரை பேசாத நிலையில், அவர் அதிபர் பதவியில் இருந்த காலம் முழுவதும் இருவரும் அப்பதவியில் தொடர்ந்து நீடித்தனர்.

தன்னுடைய மருமகன் குஷ்னர் குறித்து டிரம்ப் தொடர்ச்சியாக குறைத்து மதிப்பிட்டே பேசி வந்துள்ளார் என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் குஷ்னர் பொதுமேடை ஒன்றில் ஆற்றிய உரை குறித்து, “சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது” என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இவான்கா மற்றும் அவருடைய கணவரை பணிநீக்கம் செய்ய தான் விரும்பவில்லை என மறுத்துள்ள டிரம்ப், “இது முற்றிலும் புனைவு. என்னுடைய சிந்தனையில் கூட இது தோன்றவில்லை,” என தெரிவித்துள்ளார்.

இவான்கா டிரம்ப்

2) மெக்சிகோ போதைப்பொருள் ஆய்வகங்களில் வெடிகுண்டு வீச நினைத்தார் டிரம்ப்

மெக்சிகோவின் போதைப்பொருள் ஆய்வகங்களின் மீது வெடிகுண்டு வீச சில முறை டிரம்ப் நினைத்ததாக ஹேபர்மேன் எழுதியுள்ளார். டிரம்பின் இந்த பரிந்துரை, அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெரை திகைக்க வைத்துள்ளது.

பொது சுகாதார அதிகாரியும் பொது சுகாதார சேவை பிரிவில் அட்மிரலாகவும் உள்ள பிரெட் கிரோய்ர் என்பவருடன் நடத்திய உரையாடலின்போதே டிரம்பிற்கு இந்த யோசனை தோன்றியுள்ளது.

டிரம்பின் அலுவல்பூர்வ அறைக்கு, பொது சுகாதார அதிகாரிகள் வழக்கமாக அணியும் சீருடையில் சென்ற கிரோய்ர், மெக்சிகோவில் சட்டத்திற்கு புறம்பான போதை மருந்துகளை உற்பத்தி செய்யும் ஆய்வுக்கூடங்கள், எல்லையை தாண்டி வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அவருடைய உடையை கண்டு கிரோய்ரை ‘ராணுவ அதிகாரி’ என தவறாக நினைத்த டிரம்ப், அத்தகைய போதை மருந்து ஆய்வகங்கள் மீது வெடிகுண்டு வீச பரிந்துரைத்தார். இதன் தொடர்ச்சியாக, கிரோய்ர் அத்தகைய சீருடை அணிவதை நிறுத்த வேண்டும் என வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டது.

3) கொரோனா தொற்றால் இறப்பதை நினைத்து பயந்தார் டிரம்ப்

அக்டோபர் 2020ல் டிரம்ப், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய உடல்நிலை மோசமானது, அப்போது இறப்பை குறித்து டிரம்ப் பயந்துள்ளார்.

அப்போது அவருடைய துணை ஆலோசகர் டோனி ஆர்னட்டோ, டிரம்பின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால், அரசாங்கம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றை மட்டுப்படுத்துவதற்கான பல முயற்சிகளுக்கு மத்தியிலும் அவருக்கு இந்த பயம் நீடித்தது, கொரோனா வைரஸ் தன்னுடைய பிம்பம் மீதும் அரசியல் நோக்கங்கள் மீதும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் வருந்தினார். தன்னை சுற்றியிருந்த உதவியாளர்கள் தங்கள் முகக்கவசங்களை கழற்ற வேண்டும் என்றும் தொலைக்காட்சியில் கொரோனா வைரஸ் குறித்து பேச வேண்டாம் எனவும், அப்போதைய நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோவிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டதாகவும் ஹேபர்மேன் எழுதுகிறார்.

“இதனை பெரிதாக்க வேண்டாம்,” என்று க்யூமோவிடம் டிரம்ப் கூறியதாக அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நீங்கள் அதை ஒரு பிரச்னையாக்கப் போகிறீர்கள்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

4) பிரிட்டன் பிரதமர் உடனான கூட்டத்தில் தன் சொத்து குறித்து குறிப்பிட்ட டிரம்ப்

டிரம்பிற்கும் உலக தலைவர்களுக்குமான சில உரையாடல்கள் குறித்து ஹேபர்மேனின் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, அப்போதைய பிரிட்டன் பிரதமர் தெரெசா மே உடனான முதல் சந்திப்பில், டிரம்ப் கருக்கலைப்பு குறித்து பேசியுள்ளார். அப்போது, “சிலர் கருக்கலைப்புக்கு எதிராகவும், சிலர் அதற்கு ஆதரவாகவும் உள்ளனர். டாட்டூ குத்திய சில மிருகங்கள் உங்கள் மகளை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாகியதாக நினைத்துப் பாருங்கள்?” என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர், பேச்சை மாற்றிய டிரம்ப், வட அயர்லாந்தில் தனக்கு சொந்தமான இடத்திற்கு அருகில் கடலில் காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை எப்படி தடுப்பது என்பது குறித்து விவாதித்தார்.

தெரெசா மே

5) 2020 தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு “எதையாவது செய்யுமாறு” கூறிய டிரம்ப்

2020ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் டிரம்ப் தோற்கப் போகிறார் என்பது வெளிப்படையாக தெரிந்த நிலையில், டிரம்ப் அப்போதையை நியூயார்க் மேயரும் தன்னுடைய வழக்குரைஞருமான ரூடி க்யூலியானியை அழைத்துப் பேசினார்.

அப்போது, “ஓகே, ரூடி, நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ எல்லாவற்றையும் செய்யுங்கள். நான் பொருட்படுத்தப் போவதில்லை,” என டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே, மற்ற வழக்குரைஞர்கள் டிரம்புக்கு ஏற்றவாறு தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு செயல்பட மறுத்துவிட்டனர்.

“என்னுடைய வழக்குரைஞர்கள் பயங்கரமானவர்கள்,” என க்யூலியானிடம் டிரம்ப் கூறியதாக அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ளை மாளிகை வழக்குரைஞர் பேட் சிபோலோனை தொடர்ச்சியாக வசைபாடியுள்ளார் டிரம்ப்.

அச்சமயத்தில் டிரம்ப் சதி கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டதாகவும், தன்னுடைய சொந்த ஆலோசகர்களே ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த வழக்குரைஞர்களை அவர் தேடி சென்றதாகவும் அப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது-அமெரிக்கா

Next Story

நோபல் பரிசு: இயற்பியலுக்கான மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு