–இக்பால் அகமது-
இந்திய நாடாளுமன்ற தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1-ம் தேதி) முடிவடைந்ததும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செயல்முறை நிறைவடையும். அதன் பிறகு வாக்குகள் எண்ணப்படும் ஜூன் 4 ஆம் தேதிக்காக அனைவரும் காத்திருப்பார்கள்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, ஜூன் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், பல ஊடக நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடும்.
2024 மக்களவை தேர்தலின் கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது என்பது ஜூன் 1 ஆம் தேதி தெரியும், ஆனால் அதற்கு முன் கருத்துக்கணிப்பு தொடர்பான சில முக்கிய விஷயங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2023 சட்டமன்றத் தேர்தலின் போது வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளையும் உண்மையான முடிவுகளையும் ஒப்பிட்டு விரிவாக பார்க்கலாம்.
கருத்துக் கணிப்புகள் தொடர்பான விஷயங்களை புரிந்து கொள்ள, பிரபல தேர்தல் ஆய்வாளரும், தேர்தல் தொடர்பான ஆய்வுகளுக்கான `சிஎஸ்டிஎஸ் – லோக்நிதி’ என்னும் மையத்தின் இணை இயக்குநருமான பேராசிரியர் சஞ்சய் குமாரிடம் பிபிசி பேசியது:
கருத்துக்கணிப்பு என்றால் என்ன?
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை `Exit poll’ என்று குறிப்பிடுவது வழக்கம். Exit என்றால் `வெளியேறுதல்’ என்று பொருள். அந்த வார்த்தையே அந்த கருத்துக் கணிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை கூறிவிடுகிறது.
ஒரு வாக்காளர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர்களிடம் எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார் என்பதை கேட்பார்கள். அவர்கள் சொல்ல விரும்பும் பட்சத்தில் அவரின் கருத்து பதிவு செய்யப்படும். இதனை தான் கருத்துக்கணிப்பு என்று அழைக்கிறோம்.
கருத்துக்கணிப்பு நடத்தும் முகமைகள் தங்கள் ஊழியர்களை வாக்குச் சாவடிக்கு வெளியே நிற்க வைக்கின்றன. வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம், `யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்கப்படுகிறது.
`பிரதமர் பதவியில் போட்டியிடுபவர்களில் உங்களுக்கு பிடித்த வேட்பாளர் யார்?’ போன்ற மேலும் சில கேள்விகளும் கேட்கப்படலாம்.
பொதுவாக, ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியேறும் ஒவ்வொரு பத்தாவது வாக்காளரிடமும் அல்லது வாக்குச்சாவடி பெரியதாக இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு இருபதாவது வாக்காளரிடமும் கேள்விகள் கேட்கப்படும். வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கருத்துக்கணிப்பு நடத்தும் முக்கிய முகமைகள் எவை?
C-Voter, Axis My India, CNX ஆகியவை இந்தியாவில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் சில முக்கிய முகமைகள் ஆகும். தேர்தல் நேரத்தில் பல புதிய நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகள் செய்கின்றன. அவை தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடும்.
கருத்துக்கணிப்பு தொடர்பான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951இன் பிரிவு 126A இன் கீழ் கருத்துக் கணிப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (Representation of the People Act)
இந்தியாவில் கருத்துக்கணிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின் முக்கிய நோக்கம், தேர்தலில் கருத்துக்கணிப்புகள் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கக் கூடாது என்பதே.
தேர்தல் ஆணையம் அவ்வப்போது கருத்துக்கணிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது. கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான நடைமுறையை இது விளக்குகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகளை வாக்குப்பதிவு நாளில் வெளியிடக் கூடாது என்பது பொதுவான விதி.
தேர்தல் செயல்முறை தொடங்கியது முதல் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்து அரை மணிநேரம் வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட கூடாது. இதுதவிர, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட , தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
‘எக்ஸிட் போல்’ கணிப்புகள் சரியாக இருக்குமா?
சாமானியர்களுக்கு கருத்துக்கணிப்புகள் பற்றி விளக்குவதற்காக, பேராசிரியர் சஞ்சய் குமார் வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பை சுட்டிக்காட்டுகிறார்.
அவர் கூறுகையில், “கருத்துக்கணிப்பு மதிப்பீடுகளும் வானிலை ஆய்வு மையத்தின் மதிப்பீடுகளைப் போலவே இருக்கும். சில நேரங்களில் அவை மிகவும் துல்லியமாக இருக்கும், சில சமயங்களில் அவை நிஜ சூழலுக்கு சற்று நெருக்கமாக இருக்கும் மற்றும் சில நேரங்களில் அவை துல்லியமாக இருக்காது.
கருத்துக் கணிப்புகள் இரண்டு விஷயங்களைக் கணிக்கின்றன.
- வாக்கு சதவீதத்தை மதிப்பிடுகிறது
- வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களை மதிப்பிடுகின்றன.
என்று அவர் விவரித்தார்.
சஞ்சய் குமார் மேலும் கூறும்போது, “2004 தேர்தலை நாம் மறந்துவிடக் கூடாது. வாஜ்பேயி அரசு மீண்டும் அமையும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கூறப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கருத்துக்கணிப்புகள் பொய்யாயின.
வெவ்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெவ்வேறு மதிப்பீடுகள் வெளியாவது, ஏன்?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் சஞ்சய் குமார், ஒரு உதாரணத்தை அளித்து, “ஒரு நோயை வெவ்வேறு மருத்துவர்கள் வெவ்வேறு வழிகளில் ஆய்வு செய்து கண்டறிவது வழக்கம். இதே தான் கருத்துக் கணிப்புகளிலும் நடக்கிறது.
கருத்துக்கணிப்பு செய்யும் முகமைகள் வெவ்வேறு மாதிரி (sampling) அல்லது களப்பணிகளை வெவ்வேறு வழிகளில் செய்வதே இதற்குக் காரணம். சில ஏஜென்சிகள் தொலைபேசி வழியாக தரவுகளைச் சேகரிக்கின்றன, மற்றவர்கள் தங்கள் ஊழியர்களை களத்திற்கு அனுப்புகிறார்கள். அதனால் முடிவுகள் மாறுபடலாம்.” என்று விளக்கினார்.
இந்தியாவில் கருத்துக்கணிப்பு முதல் முறையாக நடந்தது எப்போது?
1957 இல் இந்தியாவில் இரண்டாவது பொதுத் தேர்தலின் போது, `இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் ஒபினியன்’ தனது முதல் தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது.
அதன் தலைவர் எரிக் டி கோஸ்டா ஒரு தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தலைமை தாங்கினர், ஆனால் அதை முழுமையாக `எக்ஸிட் போல்’ என்று கூற முடியாது.
அதன்பிறகு, 1980ல், டாக்டர் பிரணாய் ராய் முதல் முறையாக கருத்துக் கணிப்பு நடத்தினார். அவர் 1984 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு நடத்தினார்.
`தூர்தர்ஷன்’ 1996 இல் கருத்துக்கணிப்பை நடத்தியது. இது பத்திரிகையாளர் நளினி சிங் என்பவரால் நடத்தப்பட்டது, ஆனால் களப்பணியாற்றி தரவுகளை சேகரிக்கும் பணியை CSDS ஆய்வு மையம் மேற்கொண்டது.
இதனையடுத்து ஒவ்வொரு தேர்தலின் போதும் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளும் போக்கு தொடர்ந்தது. ஆனால் முன்பு ஒன்று அல்லது இரண்டு கருத்துக் கணிப்பு முகமைகள் மட்டுமே இருந்தன. தற்போது டசன்கணக்கான `எக்ஸிட் போல்’ முடிவுகள் வெளியாகின்றன.
பிற நாடுகளிலும் தேர்தல் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகிறதா?
இந்தியாவுக்கு முன்பே, பல நாடுகளில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
முதல் கருத்துக் கணிப்பு அமெரிக்காவில் 1936 இல் நடத்தப்பட்டது. ஜார்ஜ் கேலப் மற்றும் கிளாட் ராபின்சன் ஆகியோர் நியூயார்க் நகரில் தேர்தல் கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். அப்போது வாக்குப்பதிவு செய்து விட்டு வெளியேறிய வாக்காளர்களிடம் `எந்த அதிபர் வேட்பாளருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டது.
இவ்வாறு பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம், தேர்தலில் பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டது.
கணிப்புகளின் படி ரூஸ்வெல்ட் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் பிறகு, மற்ற நாடுகளிலும் கருத்துக் கணிப்பு செயல்முறை பிரபலமாகின. 1937 இல், பிரிட்டனில் முதல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 1938 இல், பிரான்சில் முதல் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இனி இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளைப் பற்றி பார்க்கலாம். முதலில் 2019 மக்களவைத் தேர்தல் பற்றி பார்ப்போம்..
மக்களவைத் தேர்தல், 2019
2019 மக்களவைத் தேர்தலின் போது பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டது. அதேசமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA), சுமார் 100 தொகுதிகளைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டது.
கருத்துக் கணிப்புகள் சரி என்று நிரூபிக்கும் வகையிலேயே உண்மையான தேர்தல் முடிவு இருந்தது. பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல், 2021
2021ல் கேரளா, அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. ஆனால் அனைவரின் பார்வையும் மேற்கு வங்கத்தின் மீதுதான் இருந்தது.
292 இடங்கள் கொண்ட சட்டசபையில் பெரும்பாலான முகமைகள், பாஜகவுக்கு 100 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என கணித்தன, மேலும் `ஜன் கி பாத்’ என்ற ஒரு நிறுவனம் பாஜக 174 தொகுதிகள் வரை பெறும் என்று கணித்திருந்தது.
சில முகமைகள் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் என கணித்தன. அதே சமயம் சிலர் மேற்கு வங்கத்தில் பாஜக முதல் முறையாக ஆட்சி அமைக்கலாம் என்று கணித்தனர்.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான போது, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பாஜக 2016 இல் மூன்று தொகுதிகளை வென்றிருந்தது. இம்முறை அக்கட்சிக்கு சுமார் 75 தொகுதிகள் கிடைத்தன.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2022
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் 2022 இல் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. குஜராத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதாகக் கணிக்கப்பட்டது. 182 தொகுதிகளை கொண்ட சட்டசபையில் பாஜக 117 முதல் 148 தொகுதிகளைப் பெறும் என்று மதிப்பிடப்பட்டது.
அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 30 முதல் 50 தொகுதிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, அந்த மாநிலத்தில் பாஜக 156 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 17 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
இமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பாலான முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக முன்னிலை வகிக்கும் என்று குறிப்பிட்டன. `இந்தியா டுடே-ஆக்சிஸ் மை’ முகமை மட்டும், காங்கிரஸ் முன்னிலைப் பெறும் என்று கணித்தது. தேர்தல் முடிவுகள் வந்தபோது, 68 இடங்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் 40 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. பாஜக 25 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது.
கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்கள், 2023
கர்நாடகாவில் 2023 இல் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இங்கு, ஒரு சில முகமைகளை தவிர, பெரும்பாலானவை, பாஜகவை விட காங்கிரஸின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று கணித்தன. தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்பு மதிப்பீடுகளோடு ஓரளவுக்கு ஒத்துப்போனது. காங்கிரஸின் செயல்பாடு கருத்துக்கணிப்புகள் கூறியதை விட சிறப்பாக இருந்தன. 224 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் 43 சதவீத வாக்குகளுடன் 136 இடங்களில் வெற்றி பெற்றது.
கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றி இது. பாஜக 65 தொகுதிகளையும், ஜனதா தளம் 19 தொகுதிகளையும் மட்டுமே பெற முடிந்தது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற்றது.
சத்தீஸ்கர் – கருத்துக்கணிப்பு நடத்திய முகமைகள் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நெருங்கிய போட்டி இருக்கும் என கணித்தன. சில கணிப்புகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. 90 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு 40 இடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று எந்த முகமையும் கணிக்கவில்லை. பாஜகவுக்கு 25 முதல் 48 இடங்கள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வந்தபோது, பாஜக 54 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றது.
மத்திய பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கருத்துக் கணிப்புகளில் பாஜக 88 முதல் 163 தொகுதிகளில் வெற்றிப் பெறும் என மதிப்பிடப்பட்டது. அதேசமயம் காங்கிரஸ் குறைந்தபட்சம் 62 மற்றும் அதிகபட்சமாக 137 இடங்களைப் பெறும் என மதிப்பிடப்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பாஜக 163 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் 66 தொகுதிகளில் வென்றது.
ராஜஸ்தான்
ஏபிபி நியூஸ்-சி (ABP News-C) வாக்காளர் கருத்துக்கணிப்பில் பாஜக முன்னிலை வகித்தது. ராஜஸ்தானில் பாஜக குறைந்தபட்சம் 77 இடங்களையும் அதிகபட்சமாக 128 இடங்களையும் பெறும் என மதிப்பிடப்பட்டது. அதேசமயம் ஆளும் காங்கிரஸ் குறைந்தபட்சம் 56 மற்றும் அதிகபட்சமாக 113 தொகுதிகளைப் பெறும் என மதிப்பிடப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான போது பாஜக 115 தொகுதிகளையும், காங்கிரஸ் 69 தொகுதிகளையும் கைப்பற்றியது. மற்ற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 15 இடங்களில் வெற்றி பெற்றன.
தெலங்கானா
தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் என கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. காங்கிரஸ் குறைந்தபட்சம் 49 மற்றும் அதிகபட்சமாக 80 இடங்களைப் பெறும் என மதிப்பிடப்பட்டது. அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் ஆளும் பிஆர்எஸ் பின்னடைவை சந்திக்கும் என கூறின. தேர்தல் முடிவுகள் வந்தபோது, காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும் பெற்றன.