-யூசுப் என் யூனுஸ்-
ஈரானுக்கு அணு சவுதிக்கு?
ஈரான் அணு ஆயுதம் பெற்றால், சவுதியும் அணு ஆயுதத்தை பெறும் என்று அதன் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த சல்மான், இஸ்ரேல்-சவுதி உறவு குறித்து நேர்மறையாக கூறியுள்ளார்.
கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானதிலிருந்து அதை சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை. இதற்கு காரணமாக பாலஸ்தீனம் உடனான மோதல் போக்கை சவுதி சுட்டிக்காட்டி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுடன் சவுதியை இணக்கமாக போக வைக்க அமெரிக்கா சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போதுவரை சவுதியிடம் அணு சக்தி தொழில்நுட்பம் கிடையாது.
இதை அமெரிக்கா தருவதாக கூறியிருக்கிறது. ஆனால் இதற்காக சவுதி, இஸ்ரேலுடன் இணக்கமாக போக வேண்டும் என்ற நிபந்தனை. செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த சல்மான், இஸ்ரேலுடனான உறவில் நெருங்கி வருவதாக கூறியுள்ளார். ஆனால் பாலஸ்தீன விவகாரத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் விரைவில் அணு ஆயுதங்களை பெற்றால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரிக்கும். இதனை சமாளிக்க தற்போது சவுதி அரேபியா தயாராக இருக்கிறது என்பதை இளவரசர் முகமது பின் சல்மானின் பேட்டி உறுதி செய்திருக்கிறது. அதாவது, ஈரான் அணு ஆயுதம் பெற்றால், சவுதியும் வேறு வழியின்றி அணு ஆயுதத்தை பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
2024 ஜனவரியில் பாக். தேர்தல்!
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு அதாவது வரும் ஜனவரியில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக்வே குழப்பமான அரசியல் சூழல் நிலவி வருகிறது.
வரலாறு காணாத வகையில், பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 900 ரூபாயை தாண்டி அதிர வைத்தது. அது மட்டும் இன்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது. அந்நாட்டில் 2022 வரை பிரதமராக இருந்த இம்ரான் கானும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படி ஒருபக்கம் அரசியல் குழப்பமும் உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தீடீரென நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
அந்நாட்டின் சட்டப்படி அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதுவரை காபந்து அரசு பதவியில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இம்ரான் கான் சிறையில் இருக்கும் நிலையில், தேர்தலை நடத்தி முடிக்கவே இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானில் உள்ள காபந்து அரசை வழிநடத்த அந்நாட்டின் எம்பி அன்வர்-உல்-ஹக் கக்கர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘ஐபோன் 12’ அதிக கதிர்வீச்சு!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மொபைல்போன் அதிகளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக அண்மையில் பிரான்ஸ் தெரிவித்தது. அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன.
தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் முதல்முறையாக யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 12, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகளவில் கதிர்வீச்சை வெளியிட்டு வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அதன்பேரில் பிரான்ஸ் நாட்டில் ஐபோன் 12 விற்பனைக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
சுவிட்: புர்காவுக்கு தடை வருகிறது!
பொது இடங்களில் புர்கா, ஹிஜாப் அணியக்கூடாது என்று பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனை ஏற்று சில நாடுகள் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இந்நிலையில் இந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் புதியதாக இணைந்துள்ளது.
தற்போது அமலுக்கு வந்தது புதிய சட்டம். உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு மதங்களை பின்பற்றி வருகின்றனர். இப்படி இருக்கையில் அந்தந்த மத வழக்கத்தின்படி, ஆடைகளை அணிந்துக் கொள்கின்றனர். ஆனால் சில நாடுகளில் இது சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வலதுசாரி அரசுகள் ஆட்சி செய்யும் நாடுகளில் இது தொடர்பாக சட்டங்களே இயற்றப்படுகின்றன.
இந்த நாடுகளின் வரிசையில் தற்போது சுவிட்சர்லாந்தும் இணைந்திருக்கிறது. அதாவது இந்நாட்டில் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்தம் தற்போது அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை ஒன்பது மில்லியன் இதில் ஆறு சதவீதம் வரை முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்தைத் தொலைத்த சிராஜ்!
முகமது சிராஜ் இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகி ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, திடீரென அவரின் தந்தை முகமது கயாஸ் மரணச் செய்தி கிடைத்தது. அந்த நேரம் கொரோனா காலம் என்பதால், 14 நாட்கள் தனிமையில் இருந்த பின்புதான் இந்திய அணி கிரிக்கெட் விளையாட வேண்டும்.
அந்த 14நாட்கள் தனிமைக் காலத்தில் இந்திய அணிக்குள் சிராஜ் இருந்ததால் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார். இந்தியாவுக்கு சென்று தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்று பின்னர், ஆஸ்திரேலியா வந்தால் மீண்டும் 14 நாட்கள் தனிமையில் இருக்க நேரிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டி வந்தது.
‘என் தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவது, என் மகன் ஒருநாள் இந்த தேசத்தை பெருமைப்படுத்துவான் என உறுதியாக நம்புகிறேன்’ என்பார். நான் ஆஸ்திரேலியா புறப்படும்முன், தந்தை உடல்நிலை மோசமாக இருந்ததை அறிந்தேன். ஆட்டோ ஓட்டி எந்த அளவு சிரமங்களைச் சந்தித்து என்னை இந்த நிலைக்கு என் தந்தை உயர்த்தினார் என்பது தெரியும்.
அவரின் ஆசை நான் இந்திய அணியில் இடம் பெற்று சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றியுள்ளேன். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்தை நான் இழந்துவிட்டேன்.’ எனத் தெரிவித்தார் சிராஜ்.