ஈரான் நாட்டில் வெறுமன ஹிஜாப் அணியாமல் இசைக் கச்சேரியில் பாடியதற்காக இளம் பாடகி ஒருவருக்குக் கசையடி கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன, நீதிமன்றம் என்ன கூறியுள்ளது மற்றும் இதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஈரான் நாட்டில் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. இதைக் கண்டிக்கும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். இருந்தாலும் அங்குப் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது.அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
ஈரானை சேர்ந்த பிரபல பாடகி பரஸ்தூ அகமதி, ஆன்லைன் கச்சேரி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் பாடியதற்காக அவருக்கு 74 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பாடகி பரஸ்தூ அகமதி தனது யூடியூப் சேனலில் ஒரு லைவ் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
அதில் அவர் புகழ்பெற்ற தேசபக்தி பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். இருப்பினும், அந்த வீடியோவில், 27 வயதான பரஸ்தூ அகமதி ஹிஜாப் அணியாமலும், கையில்லாத கருப்பு நிற ஆடை அணிந்தும் காணப்பட்டார். அவருடன் நான்கு ஆண் இசைக்கலைஞர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றது. இந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே, பரஸ்தூ அகமதி மற்றும் அவரது குழுவினர் ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
74 கசையடிகள்: இந்த வழக்கில் தான் ஈரானின் கோம் மாகாணத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பாடகி பரஸ்தூ அகமதி மற்றும் அவரது டீமை சேர்ந்த 8 பேருக்கு தலா 74 கசையடிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவிதமான கலை சார்ந்த அல்லது இசை சார்ந்த நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஈரான் சட்டப்படி, பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணியாமல் இருப்பது மற்றும் சில வகையான இசை நிகழ்ச்சிகள் நடத்துவது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.
கண்டனம் அதேநேரம் இந்தத் தண்டனைக்கு மனித உரிமை அமைப்புகளும், கலைஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், அமெரிக்காவைச் சேர்ந்த ஈரானுக்கான மனித உரிமைகள் மையம் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த தண்டனை ஈரானில் மனித உரிமை நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளது.
வெறுமனே பாடியதற்காகவும், ஹிஜாப் அணியாததற்காகவும் ஒரு பெண்ணுக்கு 74 கசையடிகள் வழங்குவது கொடூரமானது என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஈரான் ஹிஜாப் போராட்டங்கள் ஈரானில் கடந்த சில ஆண்டுகளாகவே ஹிஜாப் விதிகளுக்கு எதிராகவும், தனிமனித சுதந்திரத்திற்காகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, 2022ல் மாசா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் விவகாரத்தில் உயிரிழந்த பிறகு, அங்கு பெண்கள் இயக்கம் வலுப்பெற்றது.
ஈரான் அரசு எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும், பரஸ்தூ அகமதி போன்ற கலைஞர்கள் தொடர்ந்து தங்கள் கலை மூலம் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அதைத் தடுத்து ஒடுக்கவே ஈரான் இதுபோன்ற கடுமையான தண்டனைகளை விதிப்பதாகச் சொல்லப்படுகிறது.
மற்ற கலைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக ஈரான் அரசு வழங்கும் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.தற்போது வரை ஈரானின் அதிகாரப்பூர்வ நீதித்துறை செய்தி நிறுவனம் இந்தத் தீர்ப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், மனித உரிமை அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஆவணங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.





