இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் அது கூறுகிறது.
இஸ்ரேலை நோக்கி டஜன்கணக்கான ஏவுகணைகளை ஏவியதாக இரானின் புரட்சிகர காவல்படை உறுதிப்படுத்தும் அறிக்கையை இரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் அது எச்சரித்துள்ளது.
ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்த தாக்குதலில் இதுவரை எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு பகுதிகளை விட்டு வெளியேறலாம் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பின் விளைவுகள் இருக்கும் என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது
சைரன் சத்தம் கேட்டவுடன், ”நீங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து, மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும்”, எனவும் அது கூறியிருந்தது.
இரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதால், இஸ்ரேல் முழுவதும் உள்ள மற்றவர்களைப் போல நாங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றோம் என ஜெரூசலத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஆலிஸ் கட்டி கூறுகிறார்.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இரானிய தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கவும், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் பைடன் ராணுவத்தை உத்தரவிட்டார்.
இரானின் தாக்குதல்களை அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சில இரானிய ஏவுகணைகளை நடுவானில் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது.
“நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறோம். தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா பயங்கரவாதிகளின் நிலைகளைக் குறிவைப்போம். இந்த ராணுவ நடவடிக்கை வரம்புக்குப்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.” என இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.