“இந்த மெசேஜ் வந்தால் நான் செத்துவிட்டேன் என அர்த்தம்!”

“காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதன்படி காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதில் சர்வதேச ஊடகம் ஒன்றில் வேலை செய்யும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை இந்த மோதல் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இடையில் சில காலம் காசாவில் அமைதி திரும்பிய போதிலும், இப்போது மீண்டும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. தொடரும் மோதல் இருப்பினும், இந்தத் தாக்குதலால் காசாவில் உள்ள அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் உதவிக்காகவும் பாதுகாப்பாகவும் காத்திருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதில் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. 5 செய்தியாளர்கள் உயிரிழப்பு காசா நகரில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அதில் பிரபலச் சர்வதேச ஊடகமான அல் ஜஸீராவில் வேலை செய்யும் 5 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த செய்தியாளர்கள் அனாஸ் அல்-ஷெரிஃப், முகமது குரேய்கே மற்றும் ஒளிப்பதிவாளர்கள் இப்ராஹிம் ஜாஹர், மொமென் அலிவா, முகமது நௌஃபால் என அடையாளம் காணப்பட்டுள்ளது.. அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே ஊடகங்களுக்குக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் கூடாரத்தில் செய்தியாளர்கள் இருந்த நிலையில், அங்குத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மோசமான தாக்குதலில் தான் 5 செய்தியாளர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. ஒருவர் தீவிரவாதி எனக் குற்றச்சாட்டு இந்தத் தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
இருப்பினும், இஸ்ரேலின் விளக்கம் வேறு விதமாகவே இருக்கிறது. அதாவது கொல்லப்பட்ட அனாஸ் அல்-ஷெரிஃபை தீவிரவாதி என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், அவரை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் தலைவராக அனாஸ் அல்-ஷெரிஃப் செயல்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் மேலும் கூறுகையில், “அல் ஜஸீராவின் அல்-ஷெரிஃப் பத்திரிகையாளர் போல் நடித்த ஒரு பயங்கரவாதி.. காசா நகரில் சிறிது நேரத்திற்கு முன்பு, இஸ்ரேல் ராணுவம் பத்திரிகையாளராகப் போலி வேடமிட்ட அனாஸ் அல்-ஷெரிஃப் என்ற பயங்கரவாதியைக் கொன்றது.
அனாஸ் அல்-ஷெரிஃப் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பில் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவராகச் செயல்பட்டதுடன், இஸ்ரேல் பொதுமக்கள் மற்றும் இஸ்ரேல் படைகள் மீதான ராக்கெட் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அல்-ஷெரிஃப் 28 வயதான அல்-ஷெரிஃப், தான் இறப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் காசா நகருக்குள் இஸ்ரேலின் குண்டுவீச்சு தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் இன்னொரு ட்வீட்டில், “இந்த ட்வீட்களை நீங்கள் பார்த்தால்.. இஸ்ரேல் என்னைக் கொன்று என் குரலை அடக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என அர்த்தம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.





