இலங்கை முழுவதும் இன்றைய தினம் (31-03-2022) சுழற்சி முறையில் 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், வரட்சியான காலநிலை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையினை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கமைய இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு 13 மணித்தியால மின்விநியோக தடைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாளை முதல் 15 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்தும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு காணவும், மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பதற்கு உள்ளுராட்சிமன்றங்கள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்த யோசனைகளையும் உரிய தரப்பினர் செயற்படுத்தவில்லை.
எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள நிலைமையில், வரட்சியான காலநிலை தொடர்வதால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை மின்சார சபை மின்விநியோக தடையை அமுல்படுத்த தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டே மின்விநியோக தடை அமுலுக்கு அனுமதி வழங்கியுள்ளோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.