தேர்தலில் போட்டியிட முடியுமா?
ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என வரலாற்றுபூர்வமான தீர்ப்பை நியூயார்க் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11 அன்று அறிவிக்கப்படும். அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றாலும் பெரும்பாலும் அபராதமே விதிக்கப்படும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த தீர்ப்பு அவமானகரமானது என்றும் மோசடியானது என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்கு ஒன்றில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை.
வரும் நவம்பரில் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் உள்ளார்.
‘யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல’ எனக்கூறி, இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரச்சார குழு நியாயப்படுத்தியுள்ளது.
“டிரம்ப்பை தோற்கடிப்பதற்கான ஒரே வழி அவரை வாக்குப்பதிவில் தோற்கடிப்பதுதான், நீதிமன்ற அறையில் அல்ல” என, பைடனின் பிரச்சாரக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அவருடைய பிரச்சாரக் குழு அவரை ‘அரசியல் கைதியாக’ சித்தரித்தது.
வழக்கு என்ன?
கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ எனப் பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.
இவ்வழக்கில் மொத்தமாக 34 புகார்களை டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டு வந்தார்.
இதுதொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்தார். மேலும், ஸ்டார்மி டேனியல்ஸுடன் உடலுறவு கொண்டதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்தார்.
இந்த வழக்கின் மையமாக உள்ள ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சியங்களை ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கின் 12 நடுவர்கள் இரண்டு நாட்கள் விவாதித்து ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர்.
டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியுமா?
குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டாலும், டிரம்ப் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக நீடிக்க முடியும்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. அதன்படி போட்டியிடுபவர் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் அமெரிக்க குடிமகனாகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும்.
குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.
ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் அதிபர் பதவியிலிருந்தவர் கைது செய்யப்படுவது வரலாற்றில் இதுவே முதன்முறை.
டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்பட முக்கிய காரணம் நீலப் பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரத்தை மறைக்க நினைத்தது தான்.
தனக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இருந்த ‘திருமணம் மீறிய உறவு’ குறித்து வெளியில் சொல்லாமல் இருக்க டிரம்ப் தரப்பு பணம் கொடுத்ததாக நடிகை வெளியிட்ட தகவலால் தான் கைது செய்யப்படும் அளவுக்கு பூகம்பமாக வெடித்தது இந்த பிரச்னை.
டிரம்ப் மீதான குற்றச்சாட்டு என்ன?
அதிபர் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நியூயார்க் தண்டனைச் சட்டப் பிரிவு 175 இன் கீழ் வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதற்காக டிரம்ப் மீது 34 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவை அனைத்துமே ஆபாசப்பட நடிகைக்கு 130,000 டாலர் பணம் வழங்கப்பட்ட விவகாரத்துடன் தான் இணைகிறது என்கிறது பிபிசி தளத்தின் அறிக்கை.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்ட டிரம்ப், சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
அப்போது அவர் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். விசாரணை முடிவடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் டிரம்ப்.
நடிகை வெளியிட்ட தகவல்
கடந்த 2006ஆம் ஆண்டு வாக்கில் தனக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததாக ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறினார்.
இந்த விஷயத்தை பற்றி வாய்திறக்காமல் இருக்க 2016ஆம் ஆண்டு அதிபர் பரப்புரையின் போது டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கல் கோஹென் தனக்கு 130,000 டாலர்கள் பணம் கொடுத்ததாகவும் நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறினார்.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட வழக்கறிஞர் கைது செய்யப்பட்டாலும், டிரம்ப் எந்தவித பிரச்னையுமின்றி தப்பித்திருந்தார், ஆனால் தற்போது அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யார் இந்த ஸ்டார்மி டேனியல்ஸ்?
ஸ்டார்மி டேனியல்ஸின் நிஜப் பெயர் ஸ்டெஃபனி க்ளிஃபார்ட். இவர் பேடன் ரூஜ், லூசியானன் என்ற இடத்தில் பிறந்தவர். இவரை இவரது தாயார் தான் வளர்த்தார். ஸ்டார்மிக்கு 9 வயது இருந்தபோது, அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.
பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்றிருந்த ஸ்டெஃபனி, 17 வயதிருக்கும்போது ஸ்ட்ரிப் கிளப் ஒன்றில் தன் தோழியை சந்தித்தார்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த ஸ்டார்மி, தானும் அந்த கிளப்பில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதன் பிறகு அவர் பல கிளப்களில் பணியாற்றினார். கிளப்பில் இணைந்த பிறகு தனது பெயரையும் மாற்றிக்கொண்டார்.
மெல்ல ஆபாசப்பட நடிகையாக உருவெடுத்த ஸ்டார்மி டேனியல்ஸ், சில படங்களை இயக்கியும் உள்ளார். நீலப்படங்களில் நடிப்பதையும் தாண்டி, ஹாலிவுட் படங்கள், டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவரை அங்கீகரிக்கும் விதமாக வெஸ்ட் ஹாலிவுட் மே 23ஆம் தேதியை ஸ்டார்மி டேனியல்ஸ் தினமாக அறிவித்தது.
நடிகையின் சுய சரிதை
டிரம்ப் உடனான தனது உறவுக் குறித்து நடிகை ஸ்டார்மி 60 மினிட்ஸ் என்ற தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். 2006 ஆம் ஆண்டு இவர்கள் சந்தித்துக்கொண்டதாகவும், டிரம்ப் தனக்கு நடிக்க வாய்ப்பளித்தாகவும் அவர் அப்பேட்டியில் கூறினார்.
அப்போது தான் அவர்கள் இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டதாக நடிகை தெரிவித்தார். அதன் பிறகு ஒரு முறை பார்ட்டி ஒன்றிற்கு டிரம்ப் தன்னை அழைத்ததாக தனது சுய சரிதை புத்தகமான “Full Disclosure”ல் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் டிரம்ப்புடன் உறவு வைத்திருந்த விவகாரத்தை வெளியில் சொன்னதை அதிபர் டிரம்ப் மறுத்திருந்தார். இதனை தொடர்ந்து 2018ல் அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தார் ஸ்டார்மி.
இதனால் தான் ஒருவரால் மிரட்டப்பட்டதாகவும், அந்த நபர் பார்க்க எப்படியிருந்தார் என்ற உருவப்படத்தையும் நடிகை வெளியிட்டிருந்தார்
தற்போது நடிகைக்கு பணம் கொடுத்து அதனை மறைத்து வழக்கில் டிரம்ப், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மேலும், “நான் நிரபராதி, அமெரிக்காவில் இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
நாடு நரகத்திற்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம், நம் நாட்டை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்தது தான்” என கூறியுள்ளார்