இனி நீருக்கு அடியில் மீனை போல இருக்கலாம்!
ரூ.3400 (SL.RS) கோடி செலவு.!
இந்த பூமி என்பது பல வினோதங்கள் பல அதிசயங்கள் நிறைந்தவை. அதில் நமக்கு ஒரு சில விஷயங்கள் மட்டுமே தெரியும். தெரியாத பல விஷயங்கள் உள்ள சூழலில், அதைக் கண்டறிய நாம் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறோம்.
அப்படி தான் கடலுக்கு அடியில் ஆய்வில் ஒரு மிகப் பெரிய பாய்ச்சலை நடத்தப் பிரபல நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது. இந்த உலகில் ஏகப்பட்ட மர்மங்கள் புதைந்து கிடைக்கும் நிலையில், அனைத்து கேள்விகளுக்கும் நமக்கு இப்போது விடைகள் கிடைக்காது.
பல மர்ம முடிச்சுகள் நம்மைச் சுற்றி இருக்கிறது. இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக ஆழ்கடலில் உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே டீப் (DEEP) என்ற நிறுவனம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.
நீருக்கு அடியில் ஆய்வகம்: அதாவது நீருக்கு அடியில் நீண்ட காலம் வாழ ஏதுவாக கடலில் பேஸ்ஸை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளனர். இந்த தளம் கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 200 மீட்டர் ஆழத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் குறைந்தது ஆறு பேர் தங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் மனிதர்களால் தரைக்கு வராமல் நீண்ட காலம் மீனை போல நீருக்கு அடியிலேயே வாழ முடியும்.
அதாவது நமக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் உள்ளேயே இருக்கும். பூமிக்கு அடிக்கடி வர தேவையில்லை.
பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள க்ளௌசெஸ்டர்ஷயர் என்ற பகுதியில் அமைந்துள்ள நிறுவனமே இந்த திட்டத்தைப் போட்டுள்ளது.
தனது திட்டம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இணையானது எனக் குறிப்பிட்டுள்ள இந்த நிறுவனம், நீருக்கு அடியில் மனித வாழ்க்கையில் இது மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு கடல்: நமது பூமியில் மூன்றில் இரண்டு பங்கு கடல் தான் இருக்கிறது. ஆனாலும் கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது.. அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து நமக்குத் தெரியாது.
இந்தச் சூழலில் விண்வெளி ஆய்வு மையத்தைப் போல கடலுக்கு அடியில் தங்கி ஆய்வு செய்யும் போது அது கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள மிகப் பெரியளவில் உதவும்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன: இது குறித்து டீப் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஈதர்டன் கூறுகையில், “இதை நாங்கள் ஒரு சிஸ்டமாக உருவாக்க முயல்கிறோம். அதாவது இந்த பேஸ் வெறுமன போய் தங்கிவிட்டு வர மட்டும் பயன்படும் ஒன்றாக இருக்காது.
அங்கேயே முழுக்க முழுக்க எல்லா ஆய்வுகளையும் செய்யும் வசதிகளை நாங்கள் கொண்டு வருவோம். கிட்டதட்ட விண்வெளி ஆய்வு மையத்தைப் போன்ற ஒன்றைக் கடலில் அமைப்போம்.
இது கடலைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்த நமக்கு உதவும்” என்றார்.
திகைத்து நின்ற ஆய்வாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே இது தொடர்பாக டீப் நிறுவனம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளது.
கடலுக்கு அடியில் உள்ள அழுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம்.. அதைத் தாங்க எந்த மாதிரியான உலோகத்தைப் பயன்படுத்தலாம் என்று பல வகை ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதற்கான பணிகள் முழுமையாக முடியும் என்றும் 2027ல் முதல் கடல் பேஸ் அமைக்கப்படும் என்று டீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.