நேட்டோ நாடுகளை மொத்தமாக முடிக்க ரஷ்யாவுக்கு அரை மணி நேரம் போதும் என விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
அணு ஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் ரஷ்யாவுக்கு நேட்டோ நாடுகளை மொத்தமாக முடிக்க அரை மணி நேரம் போதும் என அந்த நாட்டின் விண்வெளி ஏஜென்சியின் தலைவர் டிமித்ரி ரோகோசின் என்பவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய குறிக்கோள் என்ன என்பதை குறிப்பிட்ட அவர், தங்களின் எதிரிகளான மேற்கத்திய நாடுகளை தோற்கடிக்க வேண்டும் என்பதுடன், உலக வரைபடத்தில் இருந்தே உக்ரைனை அகற்ற வேண்டும் என்பது தான் என்றார்.
நேட்டோ நாடுகள் வலுக்கட்டாயமாக போரை திணிக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ள டிமித்ரி ரோகோசின், அவர்கள் பகிரங்கமாக அறிவிக்காமல் போரை முன்னெடுத்து வருகிறார்கள், தற்போது அவர்களின் கோர முகம் அனைவருக்கும் அம்பலமாகியுள்ளது என்றார்.
மட்டுமின்றி, அணு ஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், நேட்டோ நாடுகளை மொத்தமாக அழிக்க ரஷ்யாவுக்கு வெறும் அரை மணி நேரம் போதுமானது என 58 வயதான டிமித்ரி ரோகோசின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அப்படியான ஒரு கடும்போக்கு நடவடிக்கையை ரஷ்யா ஒருபோதும் முன்னெடுக்காது எனவும், அணு ஆயுத தாக்குதல்களின் விளைவுகள் நமது பூமியின் நிலையை பாதிக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ரஷ்யாவை எப்போதும் போருக்கு தயார் நிலையில் வைத்திருக்க விளாடிமிர் புடின் முயன்று வருவதாகவும், அதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் பிடியில் சிக்கி, ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் உக்ரைனுக்கு தகுந்த பதிலடி அளித்து வருவதாக குறிப்பிட்ட டிமித்ரி ரோகோசின், இது சிறப்பு இராணுவ நடவடிக்கை என ரஷ்யா கூறி வந்தாலும், உண்மையில் இது விரிவான போருக்கான முதற்கட்டம் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனை முன் நிறுத்தி நேட்டோ நாடுகளே ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும் டிமித்ரி ரோகோசின் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனை நேட்டோ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து, மோசமான எதிரியை எங்களது மேற்கு எல்லையில் இருந்து வெளியேற்றவே போராடி வருகிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.