நஜீப் பின் கபூர்
நன்றி: 13.09.2026 ஞாயிறு தினக்குரல்

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசு பதவிக்கு வந்து இரண்டு வருடங்களைத் தொட இன்னும் ஒரு வாரம்தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவர்கள் மக்களை சந்திப்பதற்காக மீண்டும் பேரணிகளை நாடு பூராவிலும் ஏற்பாடு செய்து வருகின்றார்கள். அதே போன்று நாமல் தலைமையிலான மொட்டுக் கட்சியும் தனது பலத்தைக் காட்சிப்படுத்துகின்ற ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியும் ஆங்காங்கே மக்கள் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றன. இந்த கூட்டங்கள் தொடர்பாகவும் அதன் பலம் பலயீனங்கள் பற்றியும் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் நாம் கடந்த வாரம் குறிப்பிட்டது போல அரசியல் அமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தத் தீர்ப்பை சபாநாயகர் வெளிப்படுத்தினால் அந்த விவகாரமும் சில நாட்களுக்கு நாட்டில் பேசுபொருளாக அமையும்.
இப்போது இந்தப் பேரணிகள் மக்கள் சந்திப்புக்கள் பற்றி சற்ற விரிவாகப்பார்ப்போம். அரசு கடந்த வருடம் திசம்பரில்தான் தனது மக்கள் சந்திப்புக்களை ஏற்பாடு செய்ய இருந்தது. அதிரடியாக வந்த தித்வா அந்த ஏற்பாடுகளைச் சீர்குழைத்து விட்டது. அதன் பின்னர் ஈரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேல் நடாத்திய தாக்குதல் உலக அமைதியை சீர்குழைத்ததுடன் நாடுகளின் பொருளாதாரத்திலும் பாரிய தாக்குதல்களை ஏற்படுத்தி இருந்தது. அது இன்றுவரை ஓயாமல் போய்க் கொண்டிருந்தாலும் அரசு அதனை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது என்றுதான் நாம் நம்புகின்றோம். பின்னர் கடந்த வருடம் மே தினத்தை நாடுபூராவிலும் மாவட்டத் தலைநகர்களில் ஏற்பாடு செய்து கொண்டிருந்ததால் இந்தப் பேரணிகள் பற்றிய அவதானத்தை செலுத்த முடியாமல் போய் இருந்தது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசு தனது நிலையை ஓரளவுக்கு பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது என்ற நிலையில் இப்போது அவர்கள் மக்கள் மத்தியில் போய் தமது கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அப்படியான இரு சந்திப்புக்கள் கடந்த வாரம் களுத்துறை புளத்சிங்ஹல மற்றும் பேருவளையில் நடந்தது. அந்த இரு பேரணிகளும் வெற்றிகரமாக அமைந்திருந்தது என்பதனை வஞ்கமின்றி இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.
மேலும் இப்படியான கூட்டங்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய ஜேவிபி-என்பிபி.காரர்களுக்கு நல்ல அனுபவங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்று அவர்களுக்கு மிகவும் ஜனரஞ்சகமான ஒரு மக்கள் தலைவன் ஜனாதிபதியாகக் கிடைத்திருக்கின்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் அனுரகுமார திசாநாயக்க ஒரு அசாதாரண மனிதனாக இருக்கின்றார். அவரது பேச்சாற்றல் ஆளுமை அரசுக்கு நல்ல பக்க துணையாக அமைந்திருக்கின்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது நிலைப்பாடுகளிலும் கொள்கைகளிலும் தெளிவாக இருக்கின்றார். அவருக்கு சமமான ஒரு தலைமை எதிரணியினர் மத்தியில் இன்று இல்லாமல் இருப்பது அவர்களுக்குப் பலயீனமாக இருக்கின்றது. மேலும் இலங்கை அரசியலில் எண்பத்து ஐந்து (85) வரையிலான அரசியல் கட்சிகள் கூட்டணிகள் இருந்தாலும் பெரும்பாலும் அவை அனைத்தும் போல இன்று காட்சிப் பொருட்களாகத்தான் இருப்பதாக நாம் கருதுகின்றோம்.
இதில் இரண்டாம் இடம் சஜித் தலைமையிலான ஐம.சக்தியும் மூன்றாம் இடத்தில் நாமல் தலைமையிலான மொட்டுக் கட்சியும் இருக்கின்றன. இது தவிர சில சிறுபான்மைக் கட்சிகள் ஓரளவுக்கு தமது சமூகங்களின் மத்தியில் சற்றுப் பலமாக இருக்கின்றன. ஆனாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவையும் ஆட்டம் கண்டன. இவை பெரும்பாலும் இந்த அனுர சஜித் நாமலுக்கிடையே நடக்கின்ற பலப்பரீடசையில் பார்வையாளர் நிலையில்தான் இருக்கின்றன.
களுத்துறையில் நடைபெற்ற இரு பேரணிகளிலும் சுற்று வட்டாரத்தில் இருந்த கட்சி ஆதரவாலர்கள்தான் அங்கு வந்திருந்தார்கள் அல்லது அழைத்து வரப்பட்டிருந்தனர். அங்கு போனவர்கள் கூட்ட அமர்வுகளிலும் அதனை செவிமடுப்பதிலும் ஒரு கட்டுக்கோப்புடன் இருந்ததை நாம் அவதானிக்க முடிந்தது. பொதுவாக ஜேவிபி. என்பிபி. அப்படித்தான் கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள். இப்போது அவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொது மக்களும் அதற்கு இசைவாக அதில் கலந்து கொள்ள பழகிக் கொண்டிருக்கின்றார்களோ என்று யோசிக்கத் தோன்றுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் உரையை சுருக்கமாக எடுத்துக் கொண்டால்

1.இனவாதம் என்ற பேச்சுக்கே நாட்டில் இனி இடமில்லை.
2.மக்கள் நலனுக்கான மாற்றங்கள் தொடரும்.
3.குற்றவாளிகளுக்குத் தண்டனை.
4.கட்டுக்கோப்பான ஒரு சமூக அமைப்பு.
5.ஊழல் மோசடி இல்லாத ஆட்சி
என்றுதான் இருந்தது. அதே நேரம் சஜித் நாமல் கூட்டங்களை நடாத்துகின்ற போது அதன் கலாச்சாரம் எப்படி இருக்கும் என்பதை நமக்குப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
தாம் நடத்துகின்ற இந்தக் கட்சிக் கூட்டங்களுக்கு ஆளும் தரப்பினர் அரச வளங்களையோ பணத்தையோ பாவித்துக் கொள்ளவில்லை. அவர்கள் கட்சிதான் அதனைப் பொறுப்பேற்றிருந்தது. நேரலை ஒளி ஒலி பரப்புக்கள் மேடை அமர்வு ஒழுங்குகள் அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றிருந்ததாக தெரிகின்றது. கடந்த ஆட்சி காலத்தில் இப்படியாக கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்கின்ற போது குறிப்பாக ராஜபக்ஸாக்கள் காலத்தில் அதற்கான வளம் பணம் என்பன எங்கிருந்து எடுக்கப்படடது என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படி ஆளும்தரப்பு மக்கள் சந்திப்புக்கள் வருகின்ற நாட்களில் நாடுபூராவில் நடத்தும். அதனால் இவர்கள் மாகாணசபைத் தேர்தலுக்குத் தயாராகின்றார்களோ என்ற ஒரு சின்ன சந்தேகமும் எதிரணியினருக்கு இருந்து வருகின்றது. ஜே.ஆர் ஜெயவர்தன ஆர்.பிரேமதச விஜேதுங்ஹ ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நாட்டில் 17 வருடங்கள் நீடித்து இருந்தது. சந்திரிக்கா மஹிந்த மைத்திரி கோட்டா ரணில் ஆட்சி 21வருடங்கள் வரை தொடர்ந்தது. எங்கள் ஆட்சி குறைந்தது இன்னும் கால் நூற்றண்டுகளுக்கு மேல் நீடிக்கும் எனக் காலம் குறித்திருக்கின்றார் என்பிபி. செயலளர் டாக்டர் நிஹல் அபேசிங்ஹ. ஆளும் தரப்புப் பயணங்கள் அப்படி நகர…
அனுராதபுர பேரணி

சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்ற சக்தியாக இருந்தாலும் நாம் இப்போது மொட்டு நாமல் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்திருக்கின்ற கூட்டமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பதால் அது பற்றித்தான் இப்போது பேச இருக்கின்றோம். இந்த கூட்டம் பற்றி வெளிவந்து கொண்டிருக்கின்ற சில தகவல்களை முதலில் பார்ப்போம்.
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நாங்கள் கூட்டம் போட அனுமதி கேட்டோம். ஆனால் அப்படி அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த நேரம் வேறு ஒரு தரப்பினர் மைதானத்தை அன்றைய தினத்தை வாடகைக்கு அமர்த்தி விட்டனர். இது அரசாங்கம் செய்த சதி என்று மொட்டுத் தரப்பினர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மேலும் எங்கள் கூட்டத்துக்கு நாடுபூராவிலும் மக்கள் வருகை தர இருக்கின்றார்கள். குறிப்பாக யாழில் இருந்து கூட மக்கள் வர இருப்பதாக பிரதான ஏற்பாட்டாளர் திஸ்ஸ குட்டியரச்சி கூறி வருகின்றர்.
அனுர தரப்பினர் மாவட்டத்தில் தொகுதி வளையங்களை வகுத்துக் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்ற நேரத்தில் நாமல் தரப்பினர் முழு நாட்டுக்கும் ஒரு கூட்டம் போட்டு பேரணியை ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்தக் கூட்டம் எயர் பஸ் கொமிஸ் விவகாரத்தில் தான் கைதாக இருப்பதைத் தெரிந்து கொண்டு நாமல் ஏற்பாடு செய்த ஒரு கூட்டம் என்று பரவலான குற்றச்சாட்டு. இப்போது மனிதன் கைதாகியதை ஒரு இசுவாக வைத்து கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எனவே பெரும் பணச் செலவில் இந்தக் கூட்டம் ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன.
இந்தக் கூட்டத்தில் பேச்சாளர்கள் என்று சொல்வதற்கு எவருமே கவர்ச்சிகரமான ஆட்கள் இல்லாத நிலை. திஸ்ஸக் குட்டி கம்மன்பில் ஒரு வேளை ஐதேகவில் இருந்து எவராவது வரலாம். அத்துடன் சாமர சம்பத் தயாசிரி போன்றவர்களையும் ஒரு வேளை அழைத்து வந்து மேடையில் பேச வைக்கலாம். அப்படித்தான் பேசினாலும் அது நாட்டில் எடுபடும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அங்கு நடக்கின்ற விடயங்களை நையாண்டி பண்ண நிறையவே சமூக ஊடகங்கள் முன்கூட்டியே தயாராக இருக்கின்றன.
ஆனாலும் இது போன்று இவர்களால் தொடர்ச்சியாக கூட்டங்களை நடாத்த முடியாது. கூட்டத்துக்கு ஆட்களை கூட்டி வருவதற்கு காசு கொடுக்கின்ற ஒரு சம்பிரதாயம் அவர்கள் தரப்பில் இருக்கின்றது. இப்போது மூன்று நேர சப்பாடு குடி தண்ணீர் வசதிகளுடன் குறைந்தது ஐயாயிரம் (5000) ரூபாய்களாவது கையில் வைக்க வேண்டி வரும். அப்படி வைத்து ஆட்களை அழைத்து வந்தாலும் ஒரு வசு வண்டிக்கு நாற்பது பேர் (40) என்று வைத்து இருநூற்றி ஐம்பது வசு (250) வண்டிகளில் ஒரு பத்தாயிரம் பேர் (10000) அளவில்தான் அழைத்து வரமுடியுமாக இருக்கும். ஆனால் வந்தவர்களை ஐம்பதாயிரம் ஒரு இலட்சம் என்று அவர்கள் சொன்னாலும் ஆச்சர்யப்பட முடியாது.
இப்படியான கூட்டங்களை ஏற்பாடு செய்ய மொட்டுக் கட்சியினரிடம் போதியளவு காசு இருந்தாலும் அழைத்து வர உணர்வுபூர்வமான தொண்டர்கள் இப்போது அங்கு கிடையாது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இவர்களுக்கு மூன்று இலட்ம் வரை வாக்குகளே கிடைத்தது. அத்துடன் நாமல் ராஜபக்ஸ கூட தேசியபட்டியலில் கரை சேர்ந்தவர்.
எனவே இப்போது பேரின சமூகம் நன்கு விளிப்படைந்திருக்கின்றது என்றுதான் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் இந்த அரசாங்கம் கோட்டாவைப் போல ஓடி ஒழிக்கின்ற ஆட்களும் கிடையாது. மேலும் பொதுமக்களின் பெரும்பான்மையினர் நாமல் குற்றவாளியாக இருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் பகிரங்கமாகப் பேசி வருகின்றார்கள். எனவே அவர்களுக்கு இப்போது நாமல் மீதோ ராஜபக்ஸாக்கள் மீதோ அனுதாபங்கள் கிடையாது. மாறாக ஒரு வைராக்கிய நிலை ஏமாற்றுக்காரர்கள் என்ற கருத்துத்தான் தெரிகின்றது.
சஜித்துடன் ஒப்பு நோக்கும் போது மொட்டு நாமலின் அரசியல் செயல்பாடுகளில் சிறியதோர் முன்னேற்றம் இருக்கின்றது. ஆனால் அந்தக் கட்சி மூன்று (3) சதவீதத்தில் இருந்து துவங்க வேண்டி இருக்கின்றது. அதே நேரம் சஜித் பதினேழு (17) சதவீதத்தில் இருந்து தான் பயணிப்பார்கள். நமது வார இதழ் விற்பனைக்கு வருகின்ற நேரத்தில் மொட்டுக் கட்சிக் கூட்டம் அனுராதபுரத்தில் நடந்து அதுபற்றி சமூக ஊடகங்கள் அக்குவேறு ஆணிவேராக ஆய்வு செய்து கொண்டிருக்கும். வருகின்ற வாரம் அதுவும் ஒரு பேசுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும்.
சஜித் கூட்டங்கள்

ஐமச.தலைவர் சஜிதும் தற்போது விவசாயிகளை மையமாக வைத்து கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றார். அவற்றிலும் சில நூறுபேர் வந்து கலந்து கொள்வதை அவதானிக்க முடிகின்றது. பொதுவாக அவர்களுடன் கூட்டணியில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகள் இந்தக் கூட்டங்களில் பெரிய பங்களிப்பை செய்வதாகவோ அதில் ஆர்வம் காட்டுவதாகவோ தெரியவில்லை. அதனால் அந்தக் கட்சியினர் தனித்துத்தான் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றாhகள். தேர்தல் காலங்களில்தான் அவர்களுடன் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகள் மேடைகளில் ஏறுகின்ற ஒரு நிலை இருப்பதும் தெரிந்ததே. மேலும் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற பொருளாதார வளம் சஜித் அணியில் இல்லை.
இதனால் அவர்கள் சிறு அளவில் மக்கள் சந்திப்புக்களைத்தான் நடாத்த முடியுமாக இருக்கின்றது. அத்துடன் உடனடியாக இந்த அரசு வீழ்கின்ற நிலையில் நாட்டில் இல்லை. இதனால் கூட்டங்களுக்கு பணத்தை செலவு செய்வது வேஸ்ட் என்று அவர்கள் கருதுகின்றார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் கட்சிக்குள் தமது தலைமையின் ஆளுமை தொடர்பில் திருப்தி இல்லாத ஒரு குழு தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. அத்துடன் ஐமச.யும் ஐதேகவும் இணைய வேண்டும் என்ற கருத்து தொடர்ந்தும் கானல் நீராகத்தான் தெரிகின்றது. ஐதேக. இணைந்தாலும் கூட அவர்களுக்கு என்ன மக்கள் செல்வாக்கா இருக்கின்றது.
நாம் கடந்த வாரம் விஜேவீர கொலையுடன் சோமவன்சாவை தொடர்பு படுத்தி எழுதிய இருந்த ஒரு குறிப்புத் தொடர்பாக மேலதிக விபரங்கள் தருமாறு பல அன்பர்கள் நமக்கு வேண்டுகோள் கொடுத்துக் வருகின்றார்கள். நிச்சயமாக வாய்ப்புக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அது பற்றிய மேலதிகத் தகவல்களைத்தரத் தயாராகத்தான் இருக்கின்றோம். அதுவரை சற்றுப் பொறுமை காக்கவும்.-நன்றி





