-நஜீப் பின் கபூர்-
மன்னன் சொலமானின் ஒரு குழந்தை இரு தாய்மார் கதையும் மனுநீதி கண்ட சோழனின் தேர் பசுக் கதைகள் எல்லாம் இன்று பொக்கிசங்களாக பெட்டிக்குள் போய் விட்டன. நாம் அறிந்த வகையில் இப்படியான கதைகள் இன்று கல்விக் கூடங்களில் குழந்தைகளுக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதுமில்லை. அதற்கான நேரம் கூட அவர்களுக்குக் கிடையாது. எனவே நமது கணிப்புக்கு எட்டியவாறு ஆயிரக்க கணக்கான பிள்ளைகள் படிகின்ற கல்விக் கூடங்களில் இந்தக் கதைகளைத் தெரிந்த குழந்தைகள் எத்தனை இருக்கின்றன என்று ஒரு ஆய்வு செய்த பார்த்தால் அதனைக் கண்டு கொள்ள முடியும்.
ஏன் தமது வீடுகளில் இருக்கின்ற பள்ளிக் குழந்தைகளிடம் இந்தக் கதைகள் பற்றி பெற்றோர்கள் கேட்டுப் பார்த்தால் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். தற்போது இளம் பெறோர்கள் கூட இந்தக் கதைகளைத் தெரிந்திருக்கின்றார்களா என்பதும் சந்தேகம். அதே நேரம் இன்றுள்ள இரண்டு மூன்று வயதுக் குழந்தைகளுக்கு கையடக்கத் தெலைபேசியைக் கொடுத்துவிட்டால் அது யூடிப், டிக் டொக் உலகிற்கு போய் தன்னையே மறந்து நிற்கும். இது இன்றைய பெற்றோருக்கு நல்ல நிம்மதியைக் கூடக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இதனை நாம் ஏன் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம் என்றால் நவீன தொழிநுட்பம் காரணமாக சமூக செயல்பாடுகளில் ஏட்பட்டுள்ள பாரிய மாற்றங்களினால் சொலமானையும் சோழனையும் நமது சமூகத்தில் இன்று கண்டு கொள்ள முடிவதில்லை.
அநீதிக்குப் பலியாகும் நீதி பற்றிய தகவல்களைச் இங்கு சொல்ல முனைவதால் இங்கு நாம் சொலமானையும் சோழனையும் ஒரு முறை நினைவு கூர்ந்திருக்கின்றோம் அவ்வளவுதான். நாம் அடிக்கடி சுட்டிக் காட்டுவது போல இன்றைய உலகு வஞ்சகமானது அதில் வாழ்கின்ற போது மனிதன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகின்றோம். நாடு என்று வருகின்ற போது அங்கு எல்லைகள் குடிகள் சட்டங்கள் நீதி ஒழுங்குகள் சம்பிரதாயங்கள் என்பனவும் இருக்கும். அதே போன்று ஆட்சியை முன்னெடுக்க அரசியல் யாப்பும் நிருவாகத்தை விழிநடாத்த சுற்றுநிருபங்களும் இருக்கும்.
நமது நாடு ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று தன்னை அழைத்துக் கொள்கின்றது. இதனால் அங்கு ஜனநாயகமும் சோஸலிசமும் இருக்க வேண்டும். இதற்கென நிருவாக மற்றும் நீதிதுறை கட்டமைப்புக்களும் இருக்கின்றன. இது இந்த நாட்டில் எந்தளவுக்கு செவ்வனே-முறையாக நடந்தேறி வருகின்றது என்பதை நாம் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இவை விடயத்தில் நாடு எந்தளவுக்கு தலைகுனிவைச் சந்திக்கின்றது என்பதும் தெளிவானதே. தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத ஒருவரை நாட்டின் தலைவராகக் கொண்டு வந்து அழகு பார்க்கும் அளவுக்கு நமது அரசியல் யாப்பு இத்துப் போனதாக இருக்கின்றது. அதன் பலயீனத்தை பாவித்துத்தான் ரணில் இன்று ஜனாதிபதி கதிரையில் அமர்ந்திருக்கின்றார்.
இப்போது நமது நீதிதுறை பற்றிப் போசுவோம். அதில் மிகவும் பிந்திய அவலம் முல்லை நீதிபதி சரவணராஜா கதை. அவர் எப்படிச் செயல்பட்டார், அவருக்கு வந்த நெருக்கடிகள் என்ன, அவர் எப்படிக் கொழும்பு வந்தார். பின் தொடர்வோர் பிடியிலிருந்து தப்பி எப்படி வெயியே போனார் என்ற தகவல்களைச் சொல்வதற்கு முன்னர் இலங்கை நீதித்துறையில் நடந்த சில துயரமான –அசிங்கமான நிகழ்வுகளை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். அரசியல்வாதிகள் தமக்கு ஏற்றவாறு தீர்ப்புக்கள் வெளிவராத சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள் என்பது ஒரு பக்கம்.
அடுத்து நீதிதுறையைச் சேர்ந்தவர்களும் தமது தனிப்பட்ட நலன்களை மையமாக வைத்து அரசியல்வாதிகளுக்குச் சாதகமான தீர்ப்புக்களை கொடுத்து அவர்களைக் காப்பாற்றிய நிகழ்வுகளும் நிறையவே இருக்கின்றன. ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை விவகாரத்தில் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பும், பிற்காலத்தில் தான் தீர்ப்பை திசை திருப்பி விட்டதால்தான் இன்று மஹிந்த அதிகாரத்துக்கு வர முடிந்தது என்றும் ஒரு முறை பகிரங்கமாகச் சொல்லி இருந்தார். இதனை நாம் அனைவரும் அறிவோம். எனவே ஆட்சியாளர்களுக்கு இசைவாக இந்த நாட்டில் நீதித்துறை வளைந்து கொடுத்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
நீதித்துறை சுயமாக செயலாற்றாது அரசியல் தலைவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு வழக்குகளை முன்னெடுக்கும் சம்பிரதாயங்கள் இன்றும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அத்துடன் ஜனாதிபதி நீதிபதிகள் மற்றும் நீதித்துறைக்கு நியமனங்களைச் செய்;கின்ற போது அதிலும் பக்கச் சார்பான தீர்மானங்கள் இருக்கின்றன. இலங்கை நீதித்துறை இங்குள்ள ஞானசாரர் போன்ற பௌத்த தோரர்களுக்கு ஒரு விதமாகவும் ஏனைய இனங்களுக்கு ஒருவிதமான தீர்மானங்கள் எடுத்த சந்தர்ப்பங்களும் அவ்வாறே நிறைய இருக்கின்றன. இன்று வடக்கு கிழக்கில் நீதிபதிகள் தீர்ப்புக்கள் செயல்பாடுகள் தொடர்ப்பில் தெற்க்கில் பகிரங்கமாக சவால்களும் எச்சரிக்கைகளும் விடுக்கப்படுக்கின்றன.
அதே போன்று நாட்டில் நீதித்துறை இரு வேறுவிதமாக தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற என்ற குற்றச்சாட்டுக்களும் பகிரங்கமாகவே பேசப்பட்டு வருகின்றன. இனரீதியான பாகுபாடுகள் பற்றியும் நிறையவே ஆதங்களும் இருந்து வருகின்றன. மேலும் ஏழைக்கு ஒருவிதமாகவும் செல்வந்தனுக்கு ஒருவிதமாகவும் சட்டம் செயல்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. விமல் வீரவன்ச பல கடவுச் சீட்டுக்களை வைத்திருந்தால் அதற்கு ஒரு நீதி, நாமல் போன்றவர்கள் பல மில்லியன் தொகை மின்சார கட்டணத்தை செலுத்தாமல் இருந்தால் அதற்கு ஒரு நீதி. அப்பாவிக் குடியானவன் ஒருவன் தனது குடிசைக்கு ஒரு இரண்டாயிரம் கட்டணத்தை செலுத்தத் தாமத்தித்தால் அதற்கு ஒரு சட்டம்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை அனுபவித்து வந்த ஒரு குற்றவளியை அதிகாரத்தில் இருக்கும் போது நூறு மில்லியன் பணத்தை வங்கிக் கொண்டு விடுதலை செய்தார் என்ற பாரதூரமான குற்றச்சாட்டு பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஜே.ஆர். அதிகாரத்தில் இருந்த போது தனக்கு சாதகமில்லாத தீர்ப்புச் சொன்னார் என்பதற்காக அந்த நீதிபதி வீட்டிற்கு கல்லெறிந்த வரலாறு. திவிநெகும விவகாரத்தில் இப்படி தீர்ப்புச் சொல்லாததால் தனக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையை பாவித்து அப்போதய ஜனாதிபதி மஹிந்த சிராணி பண்டாரநாயக்காவை வீட்டுக்கு அனுப்பி வைத்தது தொந்தரவு கொடுத்தது. இப்படியான எத்தனையோ கதைகளை நாம் பட்டியலிட முடியும் ஆனால் முல்லை சரவணராஜா கதையைப் பேச வேண்டி இருப்பதால் அந்தக் கதைகளை இத்துடன் முடித்துக் கொள்கின்றோம்.
மிக அண்மைக் காலமாக இருந்து வடக்கு கிழக்கில் ஒருவகை நிருவாக ரீதியிலான அடக்குமுறை முன்னெடுக்கப்படுவது தெரிகின்றது. இதனை ஆரோக்கியமாக சந்திக்கத் திரணியில்லாத நிலையில் அங்குள்ள அரசியல் தலைமைகள் இருக்கின்றன என்ற நமது குற்றச்சாட்டையும் நாம் இங்கு பதிய வேண்டி இருக்கின்றது. மக்கள் தயாராக இருந்தாலும் அரசியல் தலைமகள் அதனை வீரியத்துடன் சரியான திசைக்கு எடுத்துச் சொல்ல வழி தெரியாது நிற்க்கின்றன. இதற்கு நல்லதொரு உதாராணம் முல்லை நீதிபதியின் கதை.
வடக்கு கிழக்கில் பேரிவாதிகள் அரச அனுசரணை ஊடக இன்று ஒரு வகை ஆக்கிரமிப்பில் இறங்கி இருக்கின்றார்கள். அதற்கு அரச திணைக்களங்களும் அரச காரியலயங்களும் அதிகாரிகளும் பாதுகாப்புப் படைகளும் கூட துணை நிற்க்கின்றன. எனவே நாட்டில் பிரசைகள் அனைவும் சமம் என்ற கோட்பாடு இங்கு செயலிழந்து நிற்க்கின்றது. இந்த இடத்தில்தான் சிறுபான்மை சமூகங்களின் ஜனநாயக உரிமைக்காக வடக்கு கிழக்கில் நீதிபதிகள் சில தீர்ப்புக்களை அண்மையில் எடுத்திருந்தனர். இதில் வடக்கு கிழக்கில் புற்றிசல்போல கிளம்பும் பௌத்த விகாரைகள் காணி ஆக்கிரமிப்புக்களின் போது அங்குள்ள நீதிபதிகள் எடுத்த துனிவான தீர்ப்புக்கள், அதே போன்று திலீபன் நினைவு தொடர்பாக சொன்ன தீர்ப்புக்கள் தெற்க்கில் உள்ள இனவாதிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதில் குறுந்தூர் மலை விவகாரத்தில் முல்லை நீதிபதி சரவணராஜா தீர்ப்புக்கள். அதற்கு எதிராக கடும் போக்கு இனவாதிகளின் நகர்வுகள். இதில் முக்கியமானவர் சரத் வீரசேக்கர. தான் தற்செயலாக அங்கு வலிபாட்டுக்குச் சென்றிருந்த போதுதான் முல்லை நீதிபதியை சந்திக்க நேரிட்டதாக கூறும் வீரசேக்கர தனக்கு வாயை மூடிக் கொள்ளுமாறு கேட்டதன் பேரில் தான் அங்கு மௌனித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அதே நேரம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிபதி அங்கு தாராளமாகப் பேச இடமளித்ததாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார். நான் வன்முறையாக நடந்திருந்தால் அங்கு வைத்து என்னைக் கைது செய்திருக்கலாம் என்பது அவர் வாதம்.
அத்துடன் குறிப்பிட்ட நீதிபதிக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள் இருக்கின்றன. அதில் அவரது மனைவி கொடுத்த முறைப்பாடும் இருக்கின்றது. இதனால்தான் அவர் சட்ட மா அதிபரை போய் சந்தித்திருக்கின்றார். இன்று பரவலாக அவரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்படும் வீரசேக்கர வாதமாக இருக்கின்றது. தனக்கு எதிராக அவர் எந்த முறைப்பாட்டையும் அங்கும் முன்வைக்கவில்லை என்பது வீரசேக்கர கதையாக இருக்கின்றது. அவர் குறிப்பிடுகின்றபடி அவரை நீதிபதி கைது செய்யுமாறு கட்டளையிட்டிருந்தால் இன்று அவர் தெற்கில் இனவாதிகள் மத்தியில் வீரசேக்கர ஹீரோவாகி இருப்பார். அதுதான் அவர் எதிர்பார்ப்பாகவும் இருக்க வேண்டும்.
கடந்த வாரம் முல்லை நீதிபதி சரவணராஜவுக்கு ஆதரiவு தெரிவித்து தமிழ் பிரதேசங்களில் உணர்வுபூர்வமான கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. தெற்கில் நீதித்துறை தொடர்பான ஆளணி மத்தியில் இது ஒரு பெரிய இசுவாக எடுபடவில்லை என்பது நமது கணக்கு. ஆனால் அரசியல் சிவில் மட்டங்களில் இது பேசு பொருளாக இருந்தது என்பதும் உண்மை. இதிலிருந்தும் வடக்கு தெற்கில் இந்த விவகாரத்திலும் இனவாதப் பார்வை தெரிகின்றது என நாம் நம்புகின்றோம். அதே நேரம் தெற்கில் ஒரு பேரின நீதிபதிக்கு இது நடந்திருந்தால் அங்கு அவர்கள் உணர்வுகள் எப்படி அமைந்திருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
நீதிபதிக்கு மரண அச்சுருத்தல் இருந்தது அவரை உளவாளிகள் பின் தொடர்ந்தனர். சட்டமா அதிபர் அவர் வழங்கிய தீர்ப்புக்களை மாற்றி அமைக்கமாறு அழுத்தம் கொடுத்து வந்தார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இந்தப் பின்னணியில் அவர் எப்படித் தப்பி வெளிநாட்டுக்கு ஓடினார் என்று இப்போது பார்ப்போம். இவரை உளவாளிகள் அல்லது கொலையாளிகள் பின் தொடர்கின்றார்கள் என்று புரிந்து கொண்ட சரவணராஜா, அவர்களுக்கு எப்படித் தண்ணி காட்டினார் என்பதை இப்போது பார்ப்போம்.
வடக்கிலிருந்து கொழும்புக்குத் தனது காரில் வந்த நீதிபதி சட்டமா அதிபரைச் சந்திக்கப் போனதால் அவரைப் பின் தொடர்ந்தவர்கள் அவர் கொழும்பு வந்த பயணத்தை சந்தேகிக்க முடியவில்லை. பின்னர் கவனக் களைப்புக்காக அவர் தனது காரை அங்கு விற்று சில நாள் தேவைக்கு மற்றுமொரு காரைப் பாவித்திருக்கின்றார் என்றும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னர் தற்போது பேசப்படும் மேற்கத்திய தூதுவராலங்களுக்கு அவர் போய் வந்திருக்கின்றார். அப்படிப் போன ஒரு சந்தர்ப்பத்தில் அவர் குறிப்பிட்ட ஒரு தூதுவராலயக் காரில் நேரரே விமான நிலையம் போனதால் அவரை எவரும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்று ஒரு தகவல் சொல்கின்றது. அதே தகவலின்படி அவர் சிங்கப்பூர் வழியாக கனடா சேர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.
நீதிபதி சரவணராஜாவுக்கு எதிராக ஆளும் தரப்பும் அரசாங்கமும் என்ன குற்றச்சாட்டுக்ளை முன்வைத்தாலும், இந்த விவகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு தலைகுனிவை உண்டு பண்ணி இருக்கின்றது. ஆனால் ஆட்சியாளர்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வாhகள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்கள் பாடம் கற்றுக் கொண்டு திருந்துவதற்கும் வாய்ப்புக்கள் இருக்குமான என்று தெரியாது. தப்பியோடி முல்லை நீதிபதி எங்கிருந்து என்ன வாக்குமூத்தை நமக்குத் தரப் போகின்றார் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: 08.10.2023 ஞாயிறு தினக்குரல்