-நஜீப் பின் கபூர்-
தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கிள்ளும் விளையாட்டு!
சேதாரமில்லாத ஒரு சத்திர சிகிச்சைக்கு முயல்கின்றார் பசில்!
உலக அரசியலாக இருந்தாலும் நாடுகளின் அரசியலாக இருந்தாலும் அங்கு பல ஆயிரம் தலைவர்கள் வந்து போய் இருப்பார்கள். இப்படி வந்து போன எல்லோரையும் வரலாறு நினைவு கூருவது கிடையாது. மக்களும் அப்படித்தான். வரலாற்று ஹீரோக்கள்தான் காலங்கள் பூராவிலும் மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நமது நாட்டிலும் அப்படித்தான் மன்னராட்சிக் காலத்தை எடுத்துக் கொண்டால் குவேனி, விஜயன், தேவநம்பிய தீசன், பராக்கிரமபாகு, எல்லாலன்-துட்டகைமுனு என்று சிலர்தான் வரலாற்று ஹீரோக்கள். அதற்கு சில காரணங்கள் நியாயங்கள் சம்பவங்கள் இருக்கின்றன.
அதே போன்று சுதந்திரத்துக்குப் பின் நமது அரசியலை எடுத்துக் கொண்டால் மக்கள் உள்ளங்களில் தாக்கங்களை எற்படுத்திய அரசியல் தலைவர்கள் என்று பார்த்தால் டீ.எஸ், ஜே.ஆர், எஸ்.டப்லியூ.ஆர், ஸ்ரீமா, பிரமதாச, விஜேவீர, பிரபாகரன் என்போரும், சிறுபான்மை என்று பார்த்தால் மலையகம்-தொண்டா, கிழக்கில்-அஸ்ரஃப் என்றுதான் நாம் உச்சரிக்க வேண்டி இருக்கின்றது. நமது நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் பற்றி பேசுகின்ற போது அதன் வரலாறு-உருவாக்கம் என்று எடுத்துக் கொண்டால் அங்கும் இது போல பல நாமங்கள் இருக்கின்றன. சம கால அரசியலை எடுத்துக் கொண்டால் மொட்டுக் கட்சி நமது அரசியலில் தீர்க்கமான ஒரு சக்தியாக இருக்கின்றது.
இதனைத் தோற்றுவிப்பதில் பசில் ராஜபக்ஸ பங்களிப்பு முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அந்தவகையில்தான் இன்று அவரது வரவும் நாட்டில் அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் மத்தியில் அவர் மீது பாரிய விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்களும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மொட்டுக் கட்சி இன்று அரசியலில் மிகவும் நெருக்கடிகளுக்கு இலக்காகி இருக்கின்றது. இதனால் அதன் கோட் பாதார் பசில் வருகையுடன் மொட்டுக் கட்சி தனது பின்னடைவிலிருந்து சற்று விடுபடும் கட்சி மீண்டழும் – பலப்படும் என்று அதன் ஆதரவாலர்கள் நம்புகின்றார்கள்.
எழு மில்லியன் மக்களின் ஆதரவைப் பெற்ற மொட்டுக் கட்சியின் செல்வாக்கு இப்போது குறிப்பிட்ட ஓரிரு வருடங்களுக்குள் ஏன் இப்படிச் சரிந்தது என்று நாம் பெரிதாக மக்கள் மத்தியில் விளக்கம் சொல்ல வேண்டிய தேவை இல்லை. அதனை அவர்கள் கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் வருகின்றார்கள். என்றாலும் இன்று தமது பாதுகாப்புக் கருதி ராஜபக்ஸாக்களே அதிகாரத்துக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி ரணில் இன்று மொட்டுக் கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கின்றார். அரசுக்குள் ரணில் வகுத்திருக்கின்ற இந்த வியூகங்களினால் அந்தக் கட்சியில் இருந்த பிரபல்யங்கள் பின்வரிசை உறுப்பினர்களாகவும் ஜூனியர்களாக இருந்த பலர் முக்கிய அமைச்சர்களாகவும் பதவி வகிப்பது கட்சிப் பிளவுக்கு ஒரு காரணமாக இருந்து வருகின்றது.
ராஜபக்ஸாக்கள் மீது மக்கள் வெகுண்டெழுந்ததால் துவக்க நாட்களில் ஜனாதிபதி ரணிலின் இந்த அமைச்சரவை மாற்றங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் இன்று அப்படி இல்லை. அடுத்து நாடாளுமனறத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே வைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதி ரணிலிடம் பெற்றுக் கொண்ட பதவிகளினால் நாட்டில் மிகவும் செல்வாக்கான மனிதர்களாக இன்று மாறி இருக்கின்றார்கள். இதற்கு வஜிர, சாகல, சமன் ரத்னப்பிர்ய, ரங்கே பண்டார, ரவி போன்வர்களின் செல்வாக்கைக் கூறலாம். ஜனாதிபதியிடத்தில் ஏதாவது மொட்டுக் கட்சியனர் சாதிப்பதாக இருந்தால் இவர்களை முதலில் காக்கா பிடிக்க வேண்டிய ஒரு நிலை.
இந்த நெருக்கடிகள்-கட்சிக்காரர்களின் வலிகள் எல்லாவற்றையும் ராஜபக்ஸாக்கள் அறிந்து வைத்திருந்தாலும், ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அவர்கள் தவிர்க்கின்றார்கள் அல்லது தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். காரணம், தமக்கு ஆபத்தான நேரத்தில் கை கொடுத்து தம்மை பாதுகாத்தவர் ரணில் என்பதால்தான் ராஜபக்ஸாக்கள் தொட்டிலையும் ஆட்டிக் கொண்டு பிள்ளையையும் கிள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தேர்தல்கள் நெருங்கி வருவதால் இந்தப் பயணத்தை இப்படியே தொடர முடியாது. எனவேதான் நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தது போல நாமல் ஒரு எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் போல தன்னைக் கட்டிக் கொண்டு நடாகமாடுகின்றார்.
இப்போது பசில் நாட்டுக்கு வந்திருப்பதால் அரசியல் களத்தில் பல மாற்றங்கறுக்கு இடமிருக்கின்றது என்பது பரவலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒரு பொதுத் தேர்தல் வருகின்றது என்று பரவலான எதிர் பார்ப்பு நாட்டில் இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி ரணில் தன்னை ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்று எண்ணிக் கொண்டுதான் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு நல்ல உதாரணம் அவரது அஸ்வெஸ்ம வேலைத் திட்டம் மற்றும் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் வரையிலான சம்பள அதிகரிப்பு. அத்துடன் மின் கட்டணத்தில் மாற்றங்கள் என்பவற்றை இங்கு குறிப்பிட முடியும்.
இப்படி என்னதான் சலுகைகளை மக்களுக்கு கொடுத்தாலும் களநிலவரம் தமக்கு வாய்ப்பாக இல்லை என்று புரிந்திருக்கின்ற மொட்டு கோட் பாதர் பொதுத் தேர்தல் பற்றிய வரைபடங்களுடன் அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு வந்திருக்கின்றார். ஆனால் இந்த முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு ஜனாதிபதி ரணில் சம்மதிக்க வேண்டி இருக்கின்றது. அல்லது அதற்கான மாற்று வழிகளை ராஜபக்ஸாக்கள் முடிவு செய்வார்கள். ஆனால் பெரும்பாலும் இந்த விவகாரம் பேசி முடிவாகி இருக்கின்றது என்றாலும், எந்தத் தேர்தலானாலும் ரணிலுக்கும் ராஜபக்ஸாக்களுக்குமிடையே சுமுகமான ஒரு தீர்மானங்கள் அரசியலில் அவசியமாக இருக்கின்றது. அதனை அடைவதில் பெரியாளவில் மோதல்கள் வரும் என்ற நாம் நம்பவில்லை. தனிப்பட்ட ரீதியில் அரசியலில் ரணில்-ரஜபக்ஸகள் உறவு சமகாலத்தில் என்றுமே நெருக்கமாகத்தான் இதுவரை போய்க் கொண்டிருக்கின்றது.
மொட்டுக் கட்சியில் இருக்கின்ற பலர் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் இன்று ஜனாதிபதி ரணிலின் கையாட்களாகி நிற்க்கின்றார்கள். இவர்களை முள்ளில் விழுந்த சேலைபோல் லாவகமாக மீட்க வேண்டி இருக்கின்றது. ஆனால் அவர்கள் கடந்த காலங்களில் ரணில் நாட்டை சிறப்பாக வழிநடாத்திக் கொண்டு செல்கின்றார் என்று ஜனாதிபதி ரணிலுக்கு சான்றிதழ்கள் கொடுத்திருப்பதால், மொட்டுக் கட்சியினர் மத்தியில் அப்படியானவர்கள் மீது ஒரு விமர்சனம் இருக்கின்றது. இது தவிர மொட்டுக் கட்சிக்கள் ஏழு அல்லது எட்டு வரையிலான கருத்து முரன்பாடுகள் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.
அண்மையில் மொட்டுக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று கம்பஹ மாவட்டத்தில் நடைபெற்றது அந்தக் கூட்டத்திற்குப் பெரும்பலான கட்சிக்காரர்கள் கலந்து கொள்ளவில்லை. இதற்குப் பின்னணியில் இருந்தவர் கப்பம் வாங்கிய குற்றச்சாட்டில் நீதி மன்றம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியவர்தான் காரணம் என்று பின்னர் தெரிய வந்திருக்கின்றது. எனவேதான் பிரசன்ன போன்றவர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே பசில் உடனடியாக இரகசிய சந்திப்பை மேற்கொண்டிருந்தார். சந்திப்பு நடந்த அறைக்கு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இது தவிர கருத்து முரன்பாடுள்ள பல தரப்பினரை அழைத்து பசில் பல சந்திப்புக்களை வெற்றிகரமாக நடாத்தி இருக்கின்றார் என்றும் நமக்குத் தகவல்கள் வருகின்றன. அதில் அப்படி அழைத்தவர்களில் பெரும்பாலனவர்களின் எதிர்பார்ப்பு தேர்தலுக்கான பணம் தொடர்பாக அமைந்திருந்தது. அதனைத் தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதிகளும் கொடுக்கபட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதன்படி பொதுத் தேர்தல் முன்கூட்டி வருமாக இருந்தால் ஜனாதிபதி ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவது பற்றி பரிசீலிப்பதற்கும் அவர்கள் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. நம்மைப் பொறுத்தவரை ரணிலுக்கு பொதுத் தேர்தல் என்பது இளவு காத்த கிளியின் கதையாகத்தான் அமையும்.
நமது அவதானங்களின் படி முன் கூட்டி பொதுத் தேர்தலுக்குச் சென்று ஒரு ஐம்பது வரையிலான ஆசனங்களை எடுத்துக் கொண்டால் மொட்டுக் கட்சிக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் அது ஓரளவுக்கு பாதுகாப்பாகவும், எதிர்கால அரசியலுக்கு நம்பகத் தன்மையையும் ஏற்படுத்தும். அப்போது நாமலை எதிர்க் கட்சித் தலைவராக்கி எதிர்காலத்துக்கு அவரை தயார் படுத்தவும் முடியும்.
இது சீனியர் மஹிந்த ராஜபக்ஸாவையும் திருப்திப்படுத்தும். ஆனால் எந்தத் தேர்தல் வந்தாலும் தற்போது நாட்டில் இருக்கின்ற பொருளாதாரா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் இருக்கின்ற சுமுக நிலைக்கு ரணில் தரப்பினர் உரிமை கோருவார்கள் அப்படித்தான் அவர்கள் பரப்புரைகள் அமையும். என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு மொட்டுக் கட்சி தயாராக இல்லை. அதே போன்றுதான் ஐதேகா. வினரும் மொட்டுக் கட்சியுடன் இணைண்ந்து தேர்தலைச் சந்திப்பது என்பது சாத்தியமில்லாத விடயம்.
தற்போது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கின்ற பலர் சந்தியில் நிற்பது போலதான் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலையும் இன்று அரசியலில் இருக்கின்றது. குறிப்பாக ஒரு பொதுத் தேர்தலுக்கு தாம் தயாராவதானால் முதலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது தொகுதி அமைப்பாளர்களை நியமனம் செய்திருக்க வேண்டும். ஆனால் தேசிய மட்டத்தில் இந்த அமைப்பாளர் நியமனங்களைக் கூட அந்தக் கட்சி இன்னும் புர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் பொதுத் தேர்தலை அவர்கள் எப்படிச் சந்திக்க முடியும்? அவர்களில் முக்கியமான தலைவவர்கள் தேசியப் பட்டியலில் மொட்டுக் கட்சியில் உள்வாங்கப்பட்டாலும். வரும் பொதுத் தேர்தலில் மொட்டுக்கு எத்தனை உறுப்பினர் தேசிய பட்டியலில் கிடைக்கும் என்று யோசித்தால் அவர்கள் நிலை புரியும்.
இப்படிப் பார்க்கின்ற போது பொதுத் தேர்தலுக்கு முதலில் போவதை ஜனாதிபதி ரணிலும் அவரது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இன்று ரணிலிடம் பொறுப்பான அமைச்சுக்களைப் பெற்றிருப்பவர்களும் ஜீரணிக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரணிலில் ஆதரவாலர்காளாக மாறி இருக்கினற பெரும்பலானவர்களை பசில் தனது தரப்புக்கு மீட்டெடுப்பதில் வெற்றி பெறுவார் என்றுதான் நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்குக் காரணம் பொருளாதார ரீதியில் அவர்கள் செல்வாக்குடன் இருக்கின்றார்கள்.
பொது தேர்தலை முன்கூட்டி வைத்து உங்களை நாம் ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் செய்கின்றோம் என்று ஒரு உத்தரவாதத்தை ராஜபக்ஸாக்கள் ரணிலுக்குக் கொடுக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதே போன்று பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளரை திறந்து விடுவதன் மூலம் தம்மிக்க, பிரசன்ன போன்றவர்களுக்கு உள்ள வாய்ப்பபையும் இடைவெளியையும் வைத்து இந்த ஆட்டத்தை ராஜபக்ஸாக்கள் நடத்தவும் இடமிருக்கின்றது.
இன்று தம்மைப் பெரும் அரசியல் விற்பண்ணர்கள் போல காட்டிக் கொண்ட விமல் உதய அதுருலியே போன்றவர்களை எவரும் தமது கூட்டணிக்குள் இடம் கொடுப்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். அதே போன்றுதான் ராஜபக்ஸாக்கள் இருக்கின்ற மொட்டுக் கட்சியுடன் நாம் இணைந்து அரசியல் செய்வதை விட அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது மேலான என்று இப்போதைக்கு அவர்களுடன் கூட இருந்த பல அரசியல்வாதிகள் பகிரங்கமாக பொது அரங்குகளிலும் பேசியும் வருகின்றார்கள். அப்படிப் பார்க்கின்றபோது நமது அரசியலில் தீண்டப்படக்கூடாத ஒரு பட்டியலும் நீண்டு கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது. என்றலும் பணம் என்றால் பிணமும் வாய்திறக்கின்ற ஒரு கதையும் வழக்கில் இருக்கின்றது என்பதனை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: 10.03.2024 ஞாயிறு தினக்குரல்