-நஜீப் பின் கபூர்-
பொதுத் தேர்தல் முந்தினால் ரணில்-ராஜபக்ஸ இரகசிய டீல்!
நாம் நெடுநாளாக பொதுத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்றெல்லாம் நிறையவே பேசி வந்திருக்கின்றோம். இனி பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பே இல்லை என்ற ஒரு கட்டத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல்தான் என்று நாமும் எமது நிலைப்பாட்டை கடைசி நேரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது. இப்போது விரட்டடியடிக்கப்பட்ட பூதம் மீண்டும் தலை நீட்டி இறுதியாக ஒரு முறை முறைப்பது போல பொதுத் தேர்தல் கதை ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் உச்சரிக்கப்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. இதனால் இப்படி ஒரு பொதுத் தேர்தல் தீர்மானத்துக்கு ஆட்சியாளர்கள் வருவதற்கு இருக்கின்ற கடைசி ஒரு வாய்ப்புதான் இந்த வாரம் மட்டுமே.
உடனடியாக பொதுத் தேர்தல் அறிவிப்பை இந்த மே நடுப் பகுதியில் விடுத்து ஜூலை முதல் வாரத்தில் நடத்த ஒரு சின்ன வாய்ப்பு இன்னும் இருக்கின்றது. அந்தத் தேர்தல் முடிந்தவுடன் செப்தெம்ப 16 க்கும் அக்தோபர் 17க்கும் இடையில் ஜனாதிபத் தேர்தல் நடத்த வேண்டி இருக்கின்றது. தேர்தல் திணைக்களம் இப்போது ஜனாதிபதித் தேர்தலுக்குத்தான் தன்னை தயார் செய்து வருகின்றது.
இந்த வாரம் கடந்து போனால் பொதுத் தேர்தலுக்கு இப்படியான ஒரு வாய்ப்புக்கு இனி இடமே இல்லை. அது பற்றித்தான் இப்போது பேசப்போகின்றோம். நாட்டிலிருந்து ஓடி ஒலிந்த ராஜபக்ஸாக்கள் ரணிலை ஜனாதிபதியாக நியமித்து இன்று வரை தமது அரசியலில் தொங்கிக் கொண்டு பயணிக்க முடிந்தது. மறு புறத்தில் எவருமே பொறுப்பேற்றக முடியாத நிலையில் தான் சீரழிந்து போன ஒரு நாட்டை பொறுப்பேற்று இப்போது வெற்றிகரமாக மீட்டுக் கொண்டு வருகின்றேன் என்று ஜனாதிபதி தினந்தோரும் கதை சொல்லிக் கொண்டு வருகின்றார். அவரது சகாக்கள் அல்லது அவர் பதவியில் அனுபவிக்கின்றவர்கள் தேர்தல்களே இன்றி ரணிலுக்கு இன்னும் ஒரு பத்து வருடங்கள் கொடுக்க வேண்டும் என்று பகிரங்க வேண்டுகோள் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
என்னதான் இப்படி கட்சிக்காரர்கள் ரணில் புகழ்பாடினாலும் ஜனாதிபதி தேர்தலைத் தள்ளிப்போட முடியாத ஒரு நிலை. ஆனால் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் ராஜபக்ஸாக்களுக்கு மிகப் பெரிய சேதாரம் என்ற நியதிப்படி பொதுத் தேர்தலை நடாத்தி ஒரு தொங்கு அரசாங்கத்தை நிறுவி அதன் பின்னர் ஒரு மெகா கூட்டணியை அமைக்கின்ற நோக்கம் ராஜபக்ஸாக்களுக்கு இருக்கின்றது என்பது நமது கருத்து. அந்த கணிப்புக்களின் படிதான் பொதுத் தேர்தலுக்கு அதிக வாய்ப்பு என்று நாமும் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கு ஜனாதிபதி ரணில் இசைவதாக தெரியவில்லை.
இந்தப் பின்னணியில் இப்போது ராஜபக்ஸாக்கள் பொதுத் தேர்தலுக்கான தமது இறுதி முயற்ச்சிகளை செய்து கொண்டு வருகின்றனர். இதனால்தான் ரணிலை ராஜபக்ஸாக்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஒரு குறிப்பையும் நாம் கடந்த வாரம் பதிந்திருந்தோம். இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக அரச நிறுவனங்களை வெளியாருக்கு விற்பதை தாம் ஆதரிக்க முடியாது அதற்குத் தாம் எதிர்ப்பு என்ற தொணியில் பெரியவர் மஹிந்த ராஜபக்ஸ ஒரு கடும் அறிக்கையை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். இது ரணிலுக்கு எதிராக நேரடியா விடுக்கப்பட்ட ஒரு தாக்குதல் என்றுதான் எடுத்தக் கொள்ள வேண்டும்.
இந்த வாரம் பொதுத் தேர்தலை முன் கூட்டி நடாத்துவதற்காக ராஜபக்ஸாக்கள் தமது இறுதி துரும்புச் சீட்டுக்கள் அனைத்தையும் கையில் எடுத்திருக்கின்றார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்றால் இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தலுக்கான அறிவுப்பு வெளிவரும். இதனால்தான் கடந்து போன பதினைந்தாம் திகதி நாடளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்ற ஒரு கதை சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த பொதுத் தேர்தல் பற்றிய கதையை சற்று தள்ளி வைத்து விட்டு இப்போது ரணில்-ராஜபக்ஸாக்கள் பலப்பரீட்சை பற்றிய செய்திகளை ஒரு முறை சுருக்கமாகப் பார்ப்போம்.
ராஜபக்ஸாக்கள் தமது அரசியல் இருப்பை தொடர்வதற்காக ரணிலை அதிகாரம் மிக்க கதிரையில் கொண்டு வந்து அமர்த்தினார்கள். துவக்கத்தில் ரணிலுக்கு சுயமாக செயல்பட ஒரு வாய்ப்பை கால் கட்டுடன் ராஜபக்ஸாக்கள் போட்டிருந்தார்கள். பொருளாதார நெருக்கடியான நாட்களில் இதே ராஜபக்ஸாக்கள் ரணிலின் அரசியல் தீர்மானங்களுக்கு அங்கிகாரமும் கொடுத்து உச்சாகமூட்டினார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் இப்போது மீண்டும் தேர்தல் காலம் என்பதால் அவருகள் ரணிலின் சிறகுகளை வெட்டிவிட்டு அவரைப் பறக்க விட எண்ணுகின்றார்கள். சில மாதங்களுக்கு முன்னர் நாம் எழுதிய ஒரு கட்டுரையில் ரணிலை எதிரியாக-வில்லனாகக் காட்டி நாட்டில் இதே ராஜபக்கஸாக்கள் அரசியல் செய்கின்ற ஒரு நாள் வரும் என்று நாம் சொல்லி இருந்தோம் இந்தக் காட்சிகள் தான் இப்போது அரங்கேரிக் கொண்டிருக்கின்றன.
ரணில் 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் ஒரு பொது வேட்பாளராக களம் இறங்க எதிர் பார்க்கின்றார். ஆனால் அவரை மொட்டுக் கட்சி வேட்பாளராகக் கொண்டு வருவதற்கு எதிர்ப்பாளர் பட்டாளம் ஒன்றும் அங்கு இருக்கின்றது. அதே நேரம் ரணில் சிலருக்கு அமைச்சுக்களையும் பொறுப்புக்களையும் கொடுத்து இப்போது அவர்களை தமது ஆதரவாலர்களாக மாற்றி வைத்திருக்கின்றார். இவர்களுக்கு தற்போது ராஜபக்ஸாக்களின் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுவதால் அவ்வாறானவர்கள் மௌனித்திருப்பதாகவும் தெரிகின்றது. இதற்கிடையில் மொட்டுக் கட்சியில் இருந்து ஒரு வேட்பாளர் வருவார் என்று அந்தக் கட்சி முக்கியஸ்தர்கள் திட்டவட்டமாகக் கூறி வருகின்றார்கள்.
அத்துடன் தம்மிக்க பெரேராவை தமது வேட்பாளராகக் களமிறக்கி அவர் பல்லைப் பிடுங்கி தேர்தலை ராஜபக்ஸாக்கள் சந்திக்கவும் ஒரு வாய்ப்பும் இருக்கின்றது. அடுத்து ஒரு கல்லில் இரு மாம்பழங்களைப் பறிப்பது போல தம்மிக்கப் பெரேராவை பிரதமர் வேட்பாளராக காட்டி ரணிலை ஜனாதிபதி வேட்பாளர் என்ற இணக்கப்டாட்டை கொடுத்து பொதுத் தேர்தலை முன் கூட்டி அறிவிக்கும் ஒரு முயற்ச்சியும் கிடப்பில் இருக்கின்றது என்றும் ஒரு கதை. அந்த தகவலின் படி ஒரு இரகசிய உடன்பாட்டை ரணில்-ராஜபக்ஸாக்களுடன் எதிர்பார்ப்பதாகவும் தகவலும் நமது காதுகளுக்குக் கிடைத்தாலும் அதன் உண்மைத் தன்மையை எம்மால் உறுதி செய்ய முடிவில்லை.
என்னதான் பொதுத் தேர்தல் பற்றிய முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் இது தீர்க்கமான ஒரு வாரம் என்பது நமது கணக்கு. இந்தத் தேர்தல் தமக்கு வாய்ப்பில்லாத ஒரு களமாக இருப்பதால் அதனை தம்மிக்கவுக்கோ அல்லது ரணிலுக்கோ விட்டுக் கொடுப்பதில் ராஜபக்ஸாக்களுக்கு பெரிய சேதாரங்கள் வரும் என்று நாம் நம்பவில்லை. ஆனால் முன்கூட்டி ஒரு பொதுத் தேர்தலுக்குப் போய் ஒரு நாற்பது (40) வரை நாடாளுமன்ற ஆசனங்களை மொட்டுக் கட்சி பெற்றுக் கொள்ளுமாக இருந்தால், தமது அடுத்த அரசியல் நகர்வுக்கு அது நல்லதொரு துவக்கமாக அமையவும் இடமிருக்கின்றது. நமது ஆய்வுகளின் படி அதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இன்று ரணில் பெயரால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற பொது மக்களுக்கான சலுகையில் ராஜபக்ஸாக்களும் உரிமை கோருவார்கள். இந்த இடத்தில் ரணிக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் ஒரு இழு பறி நிலைக்கும் இடமிருக்கின்றது. ஆனால் அமைப்பு ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலயீனமாக இருக்கின்றது. அங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு இருக்கின்ற அரசியல் அதிகாரங்களை- செல்வாக்கை வைத்து பிழைக்கின்ற ஒரு கூட்டம் மட்டும்தான். ஆனால் மொட்டுக் கட்சி இவர்களை விட அமைப்பு ரீதியில் பலமாக இருக்கின்றார்கள். ஆனால் சமூக ஊடகங்கள் மொட்டுக் கட்சிக்கு இரண்டு மூன்று சதவீத ஆதரவு மட்டுமே என்று செய்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தக் கணிப்பில் எமக்கு சற்றும் உடன்பாடுக் கிடையாது. என்னதான் சொன்னாலும் இன்னம் இனவாதிகள் நாட்டில் மௌனமாக இருக்கின்றார்கள்.
வருகின்ற பொதுத் தேர்தல் ஒன்றில் மொட்டுக் கட்சிக்கு பதினேழு முதல் இருபது (17-20) சதவீத வாக்குகள் கிடைக்கலாம். இது நாம் குறிப்படுக்கின்ற உறுப்பினர்களை வென்றெடுக்கப் (40) போதுமாக இருக்கும். இரண்டாம் இடத்தில். சஜித் அணிக்கு ஒரு ஐம்பது முதல் ஐம்பத்தி ஐந்து (50-55) வரை ஆசனங்கள் சேரும். இதனால்தான் சஜித் ராஜபக்ஸாக்கள் ரணில் மற்றும் சில்லறைகள் என்ற ஒரு மெகா கூட்டணி பற்றிய எண்ணக்கருவை நாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம். பொதுத் தேர்தலில் அணுர தரப்பினர் என்பதற்கும் (80-90) தொன்னூறுக்குமிடையில் ஆசனங்களைப் பெறுக் கூடும்.
இந்த நிலையில் தற்போது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் என்று கதையும் பொதுத் தேர்தலில் வராது. சர்வதேசமும் இந்தியாவும் இணைந்து இந்த கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழக்க வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன என்று நாம் நம்புக்கின்றோம்.
இப்போது மீண்டும் ரணில்-ராஜபக்ஸாக்கள் லடாய் பற்றிப் மீண்டும் பார்ப்போம். ரணில் ராஜபக்ஸாக்களுக்கு என்னதான் இசைவாக நடந்து அவர்களைக் காப்பற்றினாலும் இப்போது ரணில் ராஜபக்ஸாக்களுக்கு வி;டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இதனால்தான் மொட்டுக் கட்சியில் ரணிலுக்கு எதிரான தீர்மானம் பற்றிப் இப்போது பேசப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுடன் ஐம்பது வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்ள பேச்சு வார்த்தை என்று ஒரு செய்தியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது. இது சில ஊடகவியலாளர்களை விலைக்கு வாங்கி மேற் கொள்கின்ற ஒரு நாடாகம். இந்தக் கதை முற்றிலும் போலியானது.
முன்கூட்டி பொதுத் தேர்தல் அறிவிப்பு வந்து வேட்பு மனு கையேற்பது பரப்புரைக்கு குறைந்தது ஒன்றரை மாதங்களாவது வழங்குவது. தேர்தல் நடக்கின்ற திகதி. புதிய அரசாங்ம் பதவியேற்கும் நாள். இவை அனைத்துக்கும் இன்னும் இரண்டு மாதங்கள் வரையே இருக்கின்றன. எனவேதான் ராஜபக்ஸாக்களின் பொதுத் தேர்தல் பற்றிய முயற்ச்சிக்கு இது தீர்க்கமான இறுதி வாரம் என்று நாம் கூறுகின்றோம். பொதுத் தேர்தல் அறிவிப்பு வந்தால் அந்தக் கூட்டணிக்குள் வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சி எந்தளவுக்கு சாதிக்கும் என்று தெரியாது. ஆனால் அதிலுள்ள வஜிர, சாகல, ரங்கே, ருவன் போன்றவர்கள் தேசியப் பட்டிலை எதிர்பார்க்கக் கூடும். இது கூட எந்தளவுக்கு கனியும் என்பது தெரியாது.தோன்றுகின்றது.
நன்றி: 19.05.2024 ஞாயிறு தினக்குரல்