மு.கா. கட்டுக் கோப்புடன்தான் இருக்கின்றது-ஹக்கீம்!
கட்சிக் கட்டுக்கோப்புடன் இருந்தால் அதில் இருக்கின்ற தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் கட்டுக் கோப்பை மீறி தொடர்நது நடந்து வருகின்றார்களே, என்ற கேள்விக்கு பதில் வழங்கும் போது ஹக்கீம் இப்படிக் கருத்து சொல்லி இருந்தார்.
ஆனால் மு.கா. அரசியல் உயர்பீடம் செயற்குழு என்ற அனைத்தும் ஹக்கீம் விசிரிகள் கையாட்கள் எடுபிடிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதனால் தலைவர்தான் அங்கு கட்சி, கொள்கை, தீர்மானம், முடிவுகள் எல்லாம் என்ற கடுமையான விமர்சனங்கள் மு.கா.தலைவர் மீது இருந்து வருகின்றது.
கட்சி கட்டுப்பாட்டுடன்தான் இருக்கின்றது என்ற தோரணையில் ஹக்கீம் சொல்லும் கதைகளை மு.கா. போராளிகள் எப்படித்தான் பார்க்கப் போகின்றார்களோ எமக்குத் தெரியாது.
இன்று எமது கட்சியில் இருக்கின்ற பலர் ஜனாதிபதியிடம் அபிவிருத்திக்கு நிதி பெற்றிருக்கின்றார்கள். அப்படி அவர்களை காசு கொடுத்து தனது பக்கத்திற்கு ஈர்த்துக் கொள்ள ஜனாதிபதி ரணில் எடுக்கின்ற இந்த நடவடிக்கை முற்றிலும் பிழையான ஒரு செயல் என்றும் மு.கா. தலைவர் ஹக்கீம் ரணிலை விமர்சித்திருக்கின்றார்.
அதே நேரம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட எடுத்த நடவடிக்கையையும் முற்றிலும் பிழையானது முட்டாள்தனமான ஒரு நடவடிக்கை என்றும் ஹக்கீம் குறிப்பிடுகின்றார். அதே நேரம் ஒரு காலத்தில் ரணில் ஒரு ஞானி என்றும் இதே மு.கா. தலைவர் புகழ்பாடி இருந்ததும் நாம் அறிந்ததே. ஞானிகள் எப்போதாவது முட்டாள்தனமான வேலைகளைச் செய்வார்களா என்று நாம் ஹக்கீமை திருப்பிக் கேட்கின்றோம்.
இதற்கு முன்னர் மஹிந்த காலத்தில் தம்மை மக்கள் விரோத பிரேரணைகளுக்கு வாக்களிக்கும்படி எங்களுக்கு கட்டளை போட்டதே எமது தலைவர்தான். அதனால்தான் நாம் அப்படி நடந்தது என்று அதற்கு ஆதரவளித்த மு.கா. உறுப்பினர்கள் வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
இவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூறிய தலைவர் பின்னர் மன்னிப்பு என்று பல்டியடித்திருந்தார். இந்த செயல்கள் எல்லாம் கட்சி கட்டுப்பாட்டுடன் இருக்கின்றது என்பதனைக் காட்டுகின்ற செயல்களா என்று நாம் ஹக்கீமைக் கேட்கின்றோம். அப்படிப் பார்க்கின்ற போது தலைவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற முரண்பாட்டைத்தானே மு.கா.வில் நாம் பார்க்க முடிகின்றது.
நன்றி கார்டியன் நியூஸ் 31.07.2024