-நஜீப் பின் கபூர்-
சர்வதேசம் அணுரவின் செல்வாக்கை உறுதி செய்கின்றது!
ஜேவிபி. க்கு எதிராக ஓரணியில் இணையுமாறு அழைப்பு!
வாய்ப்பு கோட்டு இராஜதந்திரிகள் பின்னால் சஜித் ஓட்டம்!
கடந்த வாரம் நாட்டில் மிகவும் வைரலான செய்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் என்பிபி. தலைவருமான அணுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய அரசின் உத்தியோகபூர்வமான அழைப்பும் அவரது இந்தியா விஜயமும் அமைந்திருந்தது. போலியான மருந்துகளை வைத்தியசாலைகளுக்குக் கொடுத்து கோடிக் கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்ததற்காக அப்போதய சுகாதார அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல பொறுப்புக் கூற வேண்டும் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தற்போது சிறைச்சாலை வைத்திய மனையில் இருக்கின்றார். இதுதான் முக்கிய பேசு பொருளாக இந்த நாட்களில் இருந்தது. அணுர இந்திய விஜயம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் கெஹல்லிய விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.
என்றாலும் தன்னை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் தனக்கு சிங்கப்பூர் மருந்துகள்தான் வேண்டும் என்று அவர் கேட்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகளுக்கு போலியான மருந்தை கொடுத்து குடிமக்களுக்கு உயிராபத்துக்களை கொண்டு வந்த அமைச்சருக்கு தனியார் வைத்தியமா! என பரவலான கேள்விகளும் கிண்டல்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
அடுத்து இந்த விவகாரத்துக்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸாதான் நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டும் என கெஹெல்லியவின் சட்டதரணிகள் நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இது மொட்டுக் கட்சியைப் பொறுத்தவரையில் மிகவும் பாரதூரமான ஒரு செய்தி. இன்னும் இரண்டொரு வாரங்களில் அமெரிக்காவில் இருக்கின்ற பசில் நாட்டுக்கு வந்து மொட்டுக் கட்சியின் தேர்தல் பணிகளை கையிலெடுக்க இருக்கின்றார் என்ற செய்திகளுக்கு மத்தியில்தான், இந்த மருந்து மோசடியில் பிரதானி பசில் என்ற கதையை கெஹெல்லிய தரப்பு சட்டத்தரணிகளால் தற்போது சொல்லப்பட்டிருக்கின்றது.
மேற்சொன்ன பரபரப்பான செய்திகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்காவின் இந்திய விஜயம் இன்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. ஜேவிபி. அரசியல் இயக்கத்தை 1960 களில் துவங்கிய ரோஹன விஜேவீர கடும் போக்கு அரசியலை முன்னெடுத்த காலங்களில் இந்தியா விரோத போக்கை கடைப்பிடித்தார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.
இதற்கு அவர்கள் தரப்பில் சொல்லப்படுகின்ற விளக்கம்; நமது சுயாதிபத்தியத்துக்கு எதிராக யாரெல்லாம் தீர்மானங்களை எடுத்தார்களோ அப்போது நமது எதிர்ப்பை அதற்கு வெளிப்படுத்தி இருக்கின்றோம். இதன் பின்னரும் எமது நிலைப்பாடு அப்படித்தான் இருக்கும் என்று தெளிவாக குறிப்பிடுகின்றார்கள். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல சீனா தொடர்ப்பிலும் எமது நிலைப்பாடு இதுதான் என்பது அவர்கள் வாதம்.
என்னதான் விளக்கங்கள் கொடுத்தாலும் இந்திய தொடர்பில் ஜேவிபி. தனது இறுக்கமான பிடியைத் தளர்த்தி இருப்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு அரசியல் கட்சி அல்லது அரசியல் இயக்கம் எதிர்க் கட்சியில் இருந்து செயல்படுகின்ற போது எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ன வேண்டுமானாலும் அரசியல் கடும் போக்கை பின் பற்ற முடியும். அதே நேரம் அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரப்போகின்றார்கள் என்ற கட்டத்தை எட்டிவிட்டால் மென்போக்குடன் செயல்பட வேண்டி வருவதும் தவிர்க்க முடியாத ஒன்று.
இந்தியாவின் நிலைப்பாடும் அப்படித்தான். ஆசியாவில் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடாக இலங்கை இருக்கின்றது. எனவே அங்கு நடக்கிகன்ற ஆட்சி மாற்றங்களின் போது அயல்நாடு என்றவகையில் தனது நலன்களும் பாதுகாப்பும் அவர்களுக்கு முக்கியமாகின்றது. ஜேவிபி அரசியல் இயக்கம் அல்லது அவர்களது தேசிய மக்கள் சக்தி (என்பிபி) இன்று இலங்கையில் செல்வாக்கு மிக்க அரசியல் இயக்கமாக வளர்ந்து விட்டது. தற்போது அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் வெறும் மூன்றே ஆசனங்கள் இருந்தாலும் நாடளாவிய ரீதியில் அவர்கள் செல்வாக்கு மிக்க அரசியல் இயக்கமாக வளர்ந்திருக்கின்றார்கள் என்று, உள்நாட்டு கருத்துக் கணிப்புகள் மட்டுமல்ல சர்வதேச கருத்தக் கணிப்புக்களும் குறிப்பிடுகின்றன.
இதனால்தான் மேற்கத்திய இராஜதந்திரிகளும் அவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்திய ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அணுரா தலைமையிலான அணியினர் ஐம்பது சதவீதமான மக்கள் ஆதரவை இலங்கையில் பெற்றிருக்கின்றார்கள் என்று கூறி இருக்கின்றது. ஆனால் அந்தக் கருத்துக் கணிப்பில் நமக்கு தனிப்பட்ட ரீதியில் உடன்பாடு கிடையாது. அவர்கள் முன்னணியில் இருக்கின்றார்கள் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். நமது ஆய்வுகளின் படி ஜேவிபி-அணுர குமாரவுக்கு நாற்பது சதவீத மக்கள் ஆதரவை தொடும் நிலையில் இருக்கின்றது என்பதே உண்மையானது.
நாம் முன்பு சொன்ன மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா உளவுத்துறையினரும் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த அரசியல் மாற்றங்களை புரிந்து வைத்திருப்பதால் அணுரதரப்புடன் அரசியல் நல்லெண்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளும் ஒரு முன்னேற்பாடாகத்தான் இந்தியா அணுரகுமாரவை நாட்டுக்கு அழைத்து விரிவான பல் தரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவரைக் கௌரவப்படுத்தி இருக்கின்றது.
இதிலிருந்து அணுரகுமார தலைமையலான ஒரு அரசு நாட்டில் அமையுமாக இருந்தால் சீனாவில் ஆதிக்கம் இங்கு ஓங்கி விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு இந்தியாவுக்கு வருவது இயல்பானதும் கூட. இதனால்தான் அவர்கள் அடுத்த ஆட்சியாளர்களுடன் தற்போது நல்லெண்ண சந்திப்புக்களை நடாத்திக் கொண்டு வருகின்றார்கள் என்று நாம் இதனை எடுத்துக் கொள்ள முடியும். மேலும் நாட்டில் நடக்கின்ற அரசியல் பரப்புரைகளின் போது இந்தியாவை நலெண்ணத்துடன்தான் அணுரா தொடர்ச்சியாக சிலாகித்துப் பேசியும் வருகின்றார். எனவே ஜேவிபியும் இந்தியாவுடன் இணக்க அரசியல் செய்யவே ஜேவிபி. விரும்புகின்றது.
அமெரிக்காவுக்கு ஒரு கியூபாவாக அது இருக்க விரும்பவில்லை என்பது புரிகின்றாது. இது யதார்த்தமும் விவேகமான செயலும் கூட. சில தினங்களுக்கு முன்பு மாலைதீவில் புதிதாக பதவியேற்ற முயிஸ் அரசு இந்தியாவுடன் மோதல் போக்கை உண்டு பண்ணிக் கொண்டு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதும் நாம் பார்க்க முடிகின்றது.
இதனால்தான் தற்போதய ஜேவிபி தலைவரும் அவரது அணியினரும் இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்தி வருகின்றனர். சீனா என்னதான் அவர்களது கொள்கையுடன் ஒத்துப் போகின்ற நட்பு நாடாக இருந்தாலும், இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இங்கு ஆட்சியாளர்கள் அதிகாரம் செய்வது என்பது நெருக்கடி மிக்க ஒரு காரியமாக இருக்கும் என்பது தூர நோக்கு அரசியல் பார்வை கொண்டவர்களுக்குப் புரியும். எனவே இந்தியாவும் அடுத்து இலங்கையில் அதிகாரத்தவக்கு வருவார்கள் என்ற பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற ஜேவிபி. அணுரகுமாரவும் யதார்த்தத்தை புரிந்து கொண்டு காய் நகர்த்தி வருகின்றார்கள். இது இரு தரப்பினருக்கும் ஆரோக்கியமான முன்னெடுப்பாகும்.
இப்போது அணுரவின் இந்தியா விஜயம் இலங்கையில் என்ன உணர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது என்பதனை பார்ப்போம். ஜேவிபி. யையும் அணுரகுமாரவையும் மட்டமாக பேசி அரசியல் செய்து கொண்டிருக்கும் சஜித் தரப்பினருக்கு, அணுரவுக்கு இந்திய கொடுத்த கௌரவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர்கள் இப்போது தமது தரப்பினருக்கும் இந்தியா அழைப்புக் கிடைத்திருக்கின்றது என்ற கதையை சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்திய இராஜதந்திரிகளுடன் இதற்காக நாள் கோட்டு பின்னால் ஓடித்திரிவது பற்றிய செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. இதற்காக இந்திய இராஜதந்திரி ஒருவருடன் தலைநகரில் ஹோட்டல் ஒன்றில் இரப்போச விருந்து கொடுத்து ஒரு சந்திப்பும் நடந்திருக்கின்றது. ஆனால் ஐம்பது வரையிலான ஆசனங்களை தன்வசம் வைத்திருக்கும் சஜித்துக்கு இல்லாத முக்கியத்துவம் அணுராவுக்கு ஏன் இந்திய வழங்கியது என்று கோட்டால் அந்தக் கேள்விக்கு அவர்களிடத்தில் தெளிவான பதில்கள் இல்லை.
இலங்கையில் நடக்கின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் களத்தில் அணுரா தரப்புக்கும் சஜித் அணிக்கும்தான் போட்டி நிலை. தெருவில் இருக்கின்ற எல்லாக் குப்பைகளையும் கூட்டி மடியில் போட்டுக் கொள்வது போல சஜித் கூட்டணிகளை அமைத்து வருகின்றார். இது அவரது அணிக்குள்ளே பெரும் குழப்பங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது. அதே நேரம் ஜேவிபி அல்லது அணுரா தரப்பினர் எந்த அரசியல் கட்சிகளையும் தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை.
எந்தக் கொம்பனாக இருந்தாலும் தனி நபராக வாருங்கள் பார்க்கலாம் என்று இருக்கின்றார்கள் அவர்கள். அப்படி வருபவர்ளை நாம் முன்பொருமுறை சொன்னது போல அவர்கள் வடிகட்டித்தான் எடுக்கின்றார்கள். டலஸ், பீல்மர்ஷல் போன்றவர்கள் அவர்களுடன் இணைய ஆர்வமாக இருந்தாலும் என்பிபி. கதவுகள் அவர்களுக்குக் கூட திறக்கப்பட வில்லை. இதிலிருந்து அவர்கள் வலுவாகவும் கொள்கை ரீதியிலும் கண்டிப்பாக அரசியல் செய்வதை நாம் அவதானிக்க முடிகின்றது.
மேற்கு நாடுகள் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கை அரசியல் பற்றி நல்ல புரிதலுடன் இருப்பதால் அந்தத் தேடல்களின் பயனாகத்தான் அணுராவுக்கு இந்த முக்கியத்துவம் இந்தியாவில் கிடைத்திருக்கின்றது. ஆட்சி செய்து பழக்கப்படாதவர்கள் எப்படி ஒரு அரசாங்கத்தை முன்னெடுக்க முடியும் என்று சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை எழுப்புவோருக்கு இந்தியா கன்னத்தில் அரைந்தால் போல-சஜித் தரப்புக்குப் பதில் கொடுத்திருக்கின்றது. மேலும் இந்தியாவில் இருக்கின்ற ஊடகங்களும் குறிப்பாக செல்வாக்கு மிக்க த இந்துப் பத்திரிகை அணுரகுமரா திசாநாயக்க ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை வருகின்ற தேர்தல்களின் போது பெறுவார் என்று கருத்துத் தெரிவித்திருக்கின்றது.
இந்தியா சென்ற அணுரகுமார வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் சிரேஸ்ட பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் முதல்வர் மற்றும் கேரள அரசியல் தலைவர்கள் பிரதானிகள் என இன்னும் பல இராஜதந்திரிகளையும் தனித்தனியாக சந்தித்துப் பேசி இருக்கின்றார்கள் என்பனை அவதானிக்கின்ற போது இலங்கையில் ஆட்;சி மாற்றம் ஒன்று நடக்க இருக்கின்றது என்பதனை இந்தியா உறுதியாக நம்புகின்றது.
த இந்து கணிப்பின் படி அணுராவுக்கு ஐம்பது பிளஸ் (50). சஜிதுக்கு முப்பத்தி மூன்று (33). ஜனாதிபதி ரணிலுக்கு ஒன்பது (9) சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறி இருக்கின்றது. எனவே இந்தியா அணுராவுக்குக் கொடுக்கின்ற இந்த முக்கியத்துவம் இலங்கையில் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை உள்நாட்டில் மேலும் ஒருபடி உயர்த்த வழிவகுக்கும் என்பது திண்ணம்.
இந்திய ஊடகங்களில் அணுரவுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் பற்றி செய்திகளை ஜனாதிபதி ரணிலுக்கு நெருக்கமானவர்கள் தம்புள்ளையில் நடந்த ஒரு வைபவத்துக்கு அவர் வந்திருந்த நேரம் எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள். உண்மைதான் என்று ரணிலும் அதற்குத் தலையை அசைத்திருக்கின்றார். அதற்கு மேலாக எந்தக் கருத்தையும் அவர் அங்கு முன்வைக்கவில்லை. அணுர ஆதரவு வாக்குகள் தனக்கு ஒரு போது கிடைக்காது.
சஜித் ஆதரவு வாக்குகளைத்தான் தான் குறிவைக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை ரணில் புரிந்து வைத்திருக்கின்றார். அதனால் அணுரவை விமர்சிப்பதை அவர் தவிர்க்கின்றார். நாடாளுமன்றத்தில் மூன்றே மூன்று ஆசனங்களை வைத்திருக்கின்ற அணுராவுக்கு இந்தளவு இந்திய அரசும் ஊடகங்களும் கொடுக்கின்ற முக்கியத்துவம் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களில் மட்டுமல்ல சஜித் தரப்பிலும் அதிர்ச்சியாகத்தான் பார்க்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் செல்வாக்கு மிக்க இந்திய ஜாதக்காரர்கள் பலரும் அணுரதான் இலங்கையில் அடுத்த ஜனாதிபதி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நாமல் கூட அணுர இந்தியவிஜயத்தை ஆரோக்கியமாகப் பார்ப்பதாக் கூறி வருகின்றார். இந்திய அழைப்புக் காரணமாக இந்த விஜயம் அமைந்ததால் அணுராவின் அரசியல் எதிரிகள் இது பற்றிக் கருத்துக் கூறும்போது அடக்கியே வாசிக்கின்றார்கள்.
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அண்மையில் களத்தில் தீவிரமாக செயல்பட்ட தம்மிக்க பெரேரா தமது அணிக்கு முப்பது சதவீத மக்கள் ஆதரவு மட்டுமே இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார். ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் பலரும் இதனைப் பகிரங்க ஏற்க் கொள்கின்றார்கள். எனவே இந்த எண்ணிக்கை இன்னும் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.
அதே போன்று செல்வாக்கான அரசியல்வாதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தருமான ராஜித சேனாரத்த நாம் அனைவரும் ஒரணியில் இணையவிட்டால் இந்தத் தேர்தலில் ஜேவிபி வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்று பகிரங்கமாக பேசி வருவதுடன் சந்திரிக்க, மைத்திரி, வெல்கம, டலஸ், வாசு, அணுரபிரியதர்சன, லன்சா, ரொஷhன் ரணசிங்ஹ போன்றவர்களுக்கு ஓரணியில் வந்து இணைந்து கொள்ள வேண்டும் எனப் பகிரங்க தொலைக் காட்சி விவாதம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கின்றார். இவை அனைத்தும் ஜேவிபி மற்றும் அணுரகுமாரவின் செல்வாக்கையே கோடிட்டுக் காட்டுகின்றது.
இந்த விஜயத்தின்போது அணுர தன்னுடன் கொள்கை பரப்புச் செயலாளர் விஜித ஹேரத் தேசிய மக்கள் சக்தி செயலாளர் டாக்டர் நிஹல் அபேசிங்ஹ மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்தஆகியேரையும் அழைத்துச் சென்றிருக்கின்றார். அணுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஒன்று நாட்டில் அமையுமாக இருந்தால் நமது வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் என்பதனை நாம் எமது வாசகர்களுக்கு முதல் முறையாக சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
நன்றி: 11.02.2024 ஞாயிறு தினக்குரல்