மெல்ல உள்ளே எட்டிப்பார்த்த போலீஸ்.. அடக்கடவுளே
மனைவி மீது உச்சக்கட்ட வெறுப்படைந்த கணவர் எடுத்த முடிவானது, அவருக்கே வினையாய் முடிந்துவிட்டது.. இப்படியும் நடக்குமா? என்று பொதுமக்கள் வியப்புடன் கேள்வி எழுப்புகிறார்கள்.. யாரிந்த தம்பதி? என்ன நடந்தது சிங்கப்பூரில்? சிங்கப்பூரில் மனைவியிடமிருந்து சீக்கிரமாக விவாகரத்து பெற வேண்டும் என்று நினைத்து அவரின் காரில் கஞ்சாவை வைத்த கணவர், இறுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்தவர் டான் சியாங் லாங்.. இவருக்கு 37 வயதாகிறது.. கடந்த 2021-ல் இவருக்கு திருமணமாகியிருக்கிறது.. ஆனால், கல்யாணமாகி ஒருசில மாதங்களிலேயே, மனைவியை டானுக்கு பிடிக்காமல் போய்விட்டது. அதனால், தேவையில்லாமல் மனைவியிட தகராறு செய்து கொண்டேயிருந்தார். நாளுக்கு நாள் மனக்கசப்புகளும், சங்கடங்களும் அதிகரித்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில் கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல், அக்டோபர் 2022ம் ஆண்டு, டானை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் மனைவி.
விவாகரத்து: ஆனால், இன்னும் விவாகரத்து செய்யவில்லை.. சிங்கப்பூர் சட்டத்தை பொறுத்தவரை திருமணமாகி குறைந்தபட்சம் 3 வருடங்கள் ஆனவர்கள் மட்டுமே விவாகரத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.. ஆனால், இவர்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆகிறது. ஆனால், மனைவி மீது வெறுப்பு கொண்ட டான், எப்படியாவது உடனடியாக மனைவியை விவாகரத்து செய்துவிட வேண்டும் என்று துடித்தார்.
இதற்காக பல வழக்கறிஞர்களை நேரில் சென்று சந்தித்து பேசியிருக்கிறார்.. சீக்கிரமாக விவாகரத்து பெற ஏதேனும் வழி இருக்கா? என்று அவர்களிடம் கலந்தாலோசித்துள்ளார். அதற்கு அவர்கள், “மனைவி ஏதாவது கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டால், விரைவில் விவாகரத்தும் கிடைக்கும், குற்றம் கடுமையாக இருந்தால், மரண தண்டனையும் கிடைக்கும்” என்று ஐடியா தந்துள்ளார்கள் வக்கீல்கள்.
டானுக்கு நிறைய கடன் தொல்லைகள் இருக்கிறதாம். இந்த கடனை அடைக்க, மனைவி தனக்கு எந்தவிதத்திலும் உதவவில்லையே என்ற கோபமும் டானுக்கு நீண்டநாட்களாக இருந்து வந்தது. அதனால், மனைவி மீதான ஒட்டுமொத்த வெறுப்பின் காரணமாக, கஞ்சா கேஸில் அவரை சிக்க வைக்க முடிவு செய்தார்.
இதற்காக, உள்ளூர் வியாபாரியை சந்தித்து பேசிசி, கஞ்சா பாக்கெட்டுகளை வாங்கி கொண்டார். அத்துடன், டிடெக்டிவ் ஏஜென்சியை சேர்ந்த புலனாய்வாளர் ஒருவரை பணியில் அமர்த்தினார். தன்னுடைய மனைவி எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் ஒரு இடம் விடாமல் அவரை பின்தொடர வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டார்.
கிளவுஸ்: அதன்படியே அந்த புலனாய்வாளரும், டானின் மனைவியை பின்தொடர்ந்தார்.. கடந்த 2023, அக்டோபர் 17ம் தேதி, வடகிழக்கு சிங்கப்பூரில் காரை நிறுத்தி வைத்திருக்கிறார் என்று புலனாய்வாளர் டானுக்கு தகவல் சொன்னார். உடனே, சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்ற டான், தன்னுடைய கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டார்..
தன்னிடமிருந்த இன்னொரு கார் சாவியை பயன்படுத்தி, கஞ்சா பாக்கெட்டுகளை காரில் பின்புற சீட்டுகளில் வைத்துவிட்டார். “கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணினேன்.. இப்போ.. கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன்!”
இதனிடையே, காருக்கு அருகில் டான் வந்துள்ளதையும், இன்னொரு சாவி மூலம் கார் திறப்பதையும், தன்னுடைய செல்போனில் இருந்த கேமரா ஆப் மூலம் நோட்டிஃபிகேஷனாக தெரிந்து கொண்டார் டான் மனைவி..
மனைவி கேமரா: இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, உடனடியாக பார்க்கிங் பகுதிக்கு வந்தார்.. திடீரென தன்னுடைய மனைவி, அங்கு நிற்பதை பார்த்ததுமே, டான் வெலவெலத்து போய்விட்டார்.. எதற்காக டான் தன்னை பின்தொடர வேண்டும்? என்று சந்தேகித்த மனைவி, உடனே போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளார்.
இதையடுத்து போலீசாரும் டானை அழைத்து விசாரித்தார்கள்.. “எதற்காக காரை சுற்றி சுற்றி வந்தாய்” என்று கேட்டார்கள்.. அதற்கு டான், தன்னுடைய மனைவிக்கு வேறொருவருடன் தொடர்புள்ளதா? என்பதை பார்க்கவே, காருக்குள்ளே எட்டி பார்த்தேன் என்றார்.
டெலிகிராம்: ஆனால், இதனை நம்பாத போலீஸ், டானின் டெலிகிராம் பக்கத்தை ஆய்வு செய்தனர். அதில், “உங்கள் காரில் வைத்திருக்கும் கஞ்சாவை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லாவிட்டால் போலீசுக்கு உங்கள் மீதுதான் சந்தேகம் திரும்பும்” என்று டானின் முன்னாள் காதலி மெசேஜ் செய்திருப்பதை பார்த்து போலீசார் அதிர்ந்தனர்.
அதற்கு பிறகே போலீசார் காரை திறந்து சோதனை செய்துள்ளனர். மொத்தம் 11 காய்கறி பாக்கெட்டுகளில் 216.17 கி கஞ்சா இருந்துள்ளது.. ஆரம்பத்தில், டானின் மனைவியின் மீதுதான் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. ஆனால், அவரது செல்போன், வீடு என பல இடங்களில் சோதனை செய்ததில், டான் மனைவி அப்பாவி என்பது தெரியவந்தது. இதற்கு பிறகே, டான் பக்கம் சந்தேகம் திரும்பியிருக்கிறது.
கடுங்காவல்: டானும் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட டானுக்கு தற்போது 3 வருடம் மற்றும் 10 மாதங்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. விவாகரத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக, கஞ்சா கேஸில் மனைவியை சிக்கவைக்க நினைத்தார் கணவர்.. ஆனால், அதே கஞ்சா கேஸில் கணவரே சிக்கிவிட்டார்..!!!