-நஜீப் பின் கபூர்-
மார்ச் ஐந்தில் மொட்டு தேர்தல் பரப்புரைகள் துவங்குகின்றன
தேர்தலில் முக்கோணப் போட்டியும் அநாதைக் கூட்டணிகளும்
வரலாற்றிலே பெரும் பண மழை இந்தத் தேர்தலில் கொட்டும்
2024 ல் இரண்டு தேர்தல்கள் நடக்கும் என்று சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் சொல்லி இருந்தார். அந்த இரண்டு தேர்தல்களும், ஜனாதிபத் தேர்தல். மற்றது பொதுத் தேர்தல். அதற்குப் பின்னர் சில நாட்கள் கடந்து ஜனாதிபதித் தேர்தல் மட்டும் தான் 2024ல் நடக்கும் என்று அதே ஜனாதிபதி ரணில் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் ஜனாதிபதி வார்த்தைகள் மீது நமக்கு எப்போதுமே நம்பகத் தன்மை இன்மையால் அவர் கதைகளை நாம் ஒருபோதும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்போது முன்கூட்டி பொதுத் தேர்தல் என்று முடிவாகி இருக்கின்றது. இதனைத் துவக்கத்திலிருந்தே நாம் தொடர்ச்சியாக சொல்லி அதற்கான நியாயங்களையும் கூறி வந்திருக்கின்றோம். இதனை நமது வசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
நாம் அடித்துச் சொல்லி வந்தது போல முதலில் பொதுத் தேர்தல் தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது. இந்த முடிவை ஜனாதிபதி ரணிலும் ராஜபக்ஸாக்களும் ஏகமனதாக எடுத்து விட்டார்கள். தற்போது அமெரிக்காவில் இருக்கின்ற பசில் ராஜபக்ஸ பொதுத் தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் திட்டங்களையும் வடிவமைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து மார்ச் ஐந்தாம் திகதி (05.03.2024) நாட்டுக்கு வருகின்றார்.
எமிரெயிட் விமானத்தில் அன்று காலை எட்டு முப்பது மணிக்கு (8.30) கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வருகின்ற அவரை ஹீரோவாக்கி பெரும் ஊர்வலத்துடன் கொழும்புக்கு அழைத்து வரும் ஏற்பாடுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.
இதற்காக மொட்டு கட்சி ஆதரவலர்களை கட்டுநாயக்காவுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கின்றது. நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமையுடன் நடக்கின்ற இந்த ஊர்வலத்துடன் மொட்டுக் கட்சி தனது தேர்தல் பரப்புரைகளைத் துவங்குகின்றது என்பதுதான் நமது அவதானமாக இருக்கின்றது.
இதனால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை நடந்து வந்த ஏற்பாடுகளையும் கட்சிகள் அரசியல் செயல்பாட்டாளர்கள் நிறுத்தி விட்டு இப்போது பொதுத் தேர்தலுக்கு ஏற்றவாறு தம்மை தயார் படுத்துகின்ற பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு பரப்புரை செய்து கொண்டிருந்து பலர் தமது அடுத்த கட்ட நகர்வுகளை புதிய கோணத்தில் மற்றவும் வேண்டி வந்து விட்டது.
தமது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கூட்டணி மற்றும் புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கிலும் தான் இந்த அதிரடி முடிவை ராஜபக்ஸாக்கள் எடுத்திருக்கின்றார்கள். இப்போது ரணிலை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மொட்டுக் கட்சியினருக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
ஒரு கோடி வாக்குகளைப் பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்று சொல்லிக் கொண்டிருந்த வஜிர அபேவர்தன போன்றவர்கள் இப்போது மூக்குடைபட்டு நிற்க்கின்றார்கள். ரணிலும் ராஜபக்ஸாக்களும் எடுத்திருக்கின்ற இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து அவர்கள் இப்போது தேசியப் பட்டியலில் எப்படிப் நாடாளுமன்றம் போக முடியும் என்றுதான் யோசிக்க வேண்டி இருக்கும். அல்லது பசில் காலடியில் மண்டியிட வேண்டி வரும்.
சில மாதங்களுக்கு முன்னர் நாம் எழுதி இருந்த ஒரு கட்டுரையில் மே மாதம் அளவில்தான் பொதுத் தேர்தல் என்றும் குறிப்பிட்டிருந்தோம். அதுவும் அப்படித்தான் அமையப் போகின்றது. சிங்களத் தமிழ் புத்தாண்டில் பொது மக்களுக்கு சில சலுகைகளைக் கொடுத்து இந்தத் தேர்தலுக்கு மொட்டுக் கட்சி முகம் கொடுக்க இருக்கின்றது. இதனால்தான் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் வருகின்ற மே-ஜூன் மாதங்களுக்கு முன்னர் முடித்துவிடுமாறும் உரிய இடங்களுக்கு கட்டளைகள் பணிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் படி புத்தாண்டுக்கு இலவசமாக இருபது கிலோ அரசி. மின் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு என்றெல்லாம் சலுகைகள் என்று கதைகள். மறுபுறத்தில் நாமல் போன்றவர்கள் எதிர்க் கட்சியினரைப் போன்று அரசாங்கத்தை தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இப்போது ஜனாதிபதி ரணிலை குற்றவாளி கூண்டில் நிறுத்தி மொட்டுக் கட்சியினர் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேர்தலில் இலங்கை அரசியல் வரலாற்றிலே மிகப் பெரிய பண மழையும் கொட்ட இருக்கின்றது என்று நமக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தலுக்கான கூட்டணிகள் தொடர்பாக இப்போது கட்சிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் துரிதமாக ஓடித்திரிய வேண்டி இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் முக்கோணப் போட்டி நிலை என்றும் நாம் சொல்லி இருந்தோம். அப்படி ஒரு நிலைதான் நாடாளுமன்றத் தேர்தலிலும் வரப்போகின்றது. ராஜபக்ஸாக்களுக்கு எதிராக புதுக் கூட்டணிகள் அமைத்துக் கொண்டிருந்தவர்களில் அனேகமானவர்கள் திரும்பவும் தமது அரசியல் இருப்புக்காக அந்தக் கூட்டணிக்குள் வரவும் இடமிருக்கின்றது. முடியாதவர்கள் சஜித்துடன் போய் இணைந்து கொள்ளக் கூடும்.
இரண்டும் கெட்டான் நிலையில் சந்தியில் நிற்பவர்கள் எல்லோரும் ஒரு அச்சாறு கூட்டணி சமைத்து பொதுத் தேர்தலை சந்திக்கக் கூடும். வருகின்ற நாட்களில் இந்தக் காட்சிகளை நமக்குப் பார்க்க முடியுமாக இருக்கும். தெற்கில் திசைகாட்டி, தொலைபேசி, மொட்டு என்ற மூன்று அணிகள் தீர்க்கமாக இருக்கும். ஏனைய கூட்டணிகள் பெரிதாக எடுபட மாட்டாது. ஆனால் அவர்கள் இப்படி ஒரு கோசத்தை தேர்தல் மேடைகளில் உச்சரிப்பார்கள். நமது தயவின்றி எவரும் அரசு அமைக்க முடியாது என்பதுதான் அந்த வீரவசனமாக இருக்கும்.
மைத்திரி, லன்சா, டலஸ், விமல், சம்பிக்க போன்றவர்களின் கூட்டணிகள் தமது அடுத்த கட்டம் தொடர்பான முடிவுகளுக்கு வர வேண்டி இருக்கும். இந்தத் தேர்தலில் ராஜபக்ஸாக்களில் மஹிந்த தேர்தலில் நிற்க மாட்டார். சாமல் தேசிய பட்டியலில் வரக்கூடும். நாமல் ஹம்பாந்தோட்டையிலும் சாமல் ராஜபக்ஸ மகன் சாசி மொனராகலையில் மஹிந்தாவின் மற்றுமொரு மகன் சிச்சி குருனாகலையிலும் பசில் கொழும்பிலும் என்று ஒரு தகவல் நமக்கு கிடைத்திருக்கின்றது.
பசில் தேர்தல் பணிகளுக்குப் தலைமை தாங்கி நடாத்தினாலும் வருகின்ற பொதுத் தேர்தல் பெறுபேற்றின் அடிப்படையில்தான் அவர் தனது அமெரிக்க பிரசா உரிமை பற்றிய முடிவை எடுப்பார் என்பது நமது கணக்காக இருக்கின்றது. பிரசா உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு அவருக்கு வெறும் மூன்று நாட்கள் இருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வருகின்ற பொதுத் தேர்தல் ஒன்றின்போது அரசியல் கட்சிகள் செல்வாக்குத் தொடர்பாக நாம் விஞ்ஞான ரீதியில் கணிப்புக்களை முன் கூட்டி வசகர்களுக்கத் விரிவாக சொல்ல இருக்கின்றோம். என்றாலும் இப்போது மேல் வாரியாக அதனைச் சற்றுப் பார்ப்போம்.
கடந்த பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி அறுபத்தி எட்டு இலட்சம் வரை (6853690) வாக்குகளைப் பெற்று 145 ஆசனங்களை கைப்பற்றி இருந்தது. அதற்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா பெற்று வாக்குகளுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் இந்த முறை அந்தக் கட்சியின் செல்வாக்கு கணிசமாக சரிந்து நிற்கின்றது. அதனை அந்தக் கட்சித் தலைவர்களே பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.
சஜித் கடந்த 2019 ல் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட ஐம்பத்து ஐந்து இலட்சம் வாக்குகள் (5564239) வரும் பொதுத் தேர்தலில் அவருக்குக் கிடைக்காது. பொது தேர்தல் என்பதால் வடக்கு கிழக்கு சிறுபான்மை வாக்குகள் பிரிந்து போகும். கடைசியாக 2020ல் நடந்த பொதுத் தேர்தலில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி இருபத்தி ஏழு இலட்சம் (2771980) வரையிலான வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இது மொத்த வாக்கில் இருபத்தி நான்கு (24) சதவீதம் மட்டுமே. இதன் மூலம் அவர்களுக்கு 54 வரையிலான ஆசனங்கள் கிடைத்தன. பின்னர் அவர்களில் பலர் ஆளும் மொட்டுக் கட்சிக்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் விசுவாசமாக மாறி இருந்தனர். அதற்கான அனுமதியை சஜித் கூட்டணியில் இருந்த சிறுபான்மை தலைமைகள்தான் தமக்கு தந்திருந்தனர் என்று பல்டிகள் அதற்கு நியாயம் சொன்னதும் தெரிந்ததே.
வடக்குக் கிழக்கில் தமிழ் தரப்பினர் அனைத்தும் கடந்த பொதுத் தேர்தலில் 17 வரை ஆசனங்களை பெற்றிருந்தனர். ஆனாலும் சம்பந்தன் தலைமையிலான தமிழர் கூட்டமைப்பு இந்த தேர்தலில் சற்றுப் பின்னடைவை எதிர் நேக்கி இருந்தது. அனுரகுமார தலைமையிலான அணி அந்தத் தேர்தலில் (445958) பெற்ற வாக்குகளில் மூன்று ஆசனங்களை பெற்றிருந்தனர். ஆனால் வருகின்ற பொதுத் தேர்தலில் அனுரகுமார தலைமையிலான அணி ஒரு தீர்க்கமான சக்தியாக இருக்கும் என்று பரவலான கருத்து நாட்டில் இருக்கின்றது. அதனால்தான் நாமும் முக்கோணப் போட்டி பற்றி உச்சரித்துக் கொண்டு வருகின்றோம்.
இப்போது ரணிலுடன் நெருக்கமாக இருந்து அரசியல் செய்து அவரை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வருகின்ற முயற்சியில் இறங்கி இருந்த பிரசன்ன, பிரமித்த, மற்றும் கஞ்சன போன்ற அமைச்சர்களும்; இரஜாங்க அமைச்சர்களும் மீண்டும் பல்டியடித்து ராஜபக்ஸ கூடாரத்துக்கு திரும்பவும் நுழையப் போகின்றார்களா அல்லது மாற்றுவழிகளை நாடப் போகின்றார்களா என்பதனை இன்னும் சில நாட்களில் கண்டு கொள்ள முடியும்.
தடம் புறண்டவர்களை பொது மன்னிப்பு வழங்கி கட்சிக்குள் உள்வாங்குகின்ற பொறுப்பை மஹிந்த ராஜபக்ஸ ஏற்றிருக்கின்றார். இந்த அதிரடியான பொதுத் தேர்தல் முடிவால் பெரிதும் நெருக்கடிக்கு இலக்காகி இருப்பவர்கள் ஜனாதிபதி ரணிலை நம்பி அரசியல் செய்தவர்கள்தான் என்பதனையும் இங்கு சொல்லி ஆக வேண்டும்.
இப்படி ஒரு முடிவுக்கு ரணில்-ராஜபக்ஸாக்கள் வருவதற்கு ஜனாதிபதி தேர்தலை விட பொதுத் தேர்தல் அவர்களுக்கு பாதுகாப்பானது என்பதனாலாகும். இதனை நாம் முன்னரே சொல்லி இருந்தோம். பொது தேர்தலில் முக்கோணப் போட்டி இருப்பதால் எவருக்கும் பொரும்பான்மைக்கு வாய்ப்பு இல்லை. இதனை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.
அதே நேரம் கடந்த பொதுத் தேர்தலில் நாம் மேற்சொன்ன எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற மொட்டுக் கட்சி ஐம்பது சதவீத சரிவை எதிர் நோக்கி இருந்தாலும் அவர்களது வாக்கு வங்கி இன்னும் முப்பது சதவீதத்துக்கு மேல் சரியவில்லை என்பது நமது துவக்கக் கணிப்பு. அதே நேரம் கடந்த பொதுத் தேர்தலில் சஜித் அணி பெற்றுக் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் பெரிய மாற்றங்கள் இந்தத் தேர்தலிலும் வராது.
இன்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற அனுர அணியினர் அதிர்ச்சி தரும் வகையில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். எனவே வரும் தேர்தலில் தமது வாக்கு எண்ணிக்கையை அவர்கள் பத்து மடங்காக அதிகரித்துக் கொண்டிருந்தால் அவர்கள் ஐம்பது இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள இடமிருக்கின்றது. இது நம்ப முடியாத ஒரு கணக்காக இருந்தாலும், அப்படி ஒரு எதிர்பார்ப்பு நாட்டில் இருக்கின்றது.
ஒரு காலத்தில் வெறும் இரண்டு ஆசனங்களைப் பெற்றிருந்த இந்திய பாரதிய ஜனதா இன்று அந்த நாட்டில் செல்வாக்கான கட்சியாக மாறியது போல ஒரு நிகழ்வுதான் இது. எனவே ஒட்டு மொத்தமாக எவருக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும் என ரணில்-ராஜபக்ஸாக்கள் உறுதியாக நம்புகின்றார்கள்.
இப்படி ஒரு நிலை வரும் போது நாம் கடந்த வாரம் சுட்டிக் காட்டி இருந்தது போல மீண்டும் ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் தனக்கு நாடளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ரணிலும் கணக்குப் போட்டிருக்க வேண்டும். இது ராஜபக்ஸாக்களுக்கும் ஒரு சின்ன நிம்மதியான தேர்தல் முடிவாக வரும் என்பது அவர்கள் கண்டு பிடிப்பாகவும் இருக்கலாம். அதானல்தான் நாம் கடந்த வாரக் கட்டுரையில் நாமல் பிரதமர். சஜித் ஜனாதிபதி என்ற ஒரு புதிய எண்ணக் கருவை நாட்டுக்குச் சொல்லி இருந்தோம்.
ஏற்கெனவே ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளை முடக்கி விட்டிருக்கின்ற திலித் ஜயவீர அணி முக்கியஸதர் ஒருவரிடம் பொதுத் தேர்தல் முன்கூட்டி வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என்று நாம் கடந்த வாரம் கேட்டதற்கு நாமும் பொது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
நன்றி: 03.03.2024 ஞாயிறு தினக்குரல்