-நஜீப்-
நாடாளுமன்றம் வருகின்ற 15ம் திகதி கலைக்கப்படும் என்று ஒரு கதை கடந்த சில தினங்களாக ஊடகங்களில் காண முடிந்தது. இதற்கு அடிப்படைக் காரணம் மொட்டுக் கட்சி நிறுவுனர் பசில் ஐந்தாவது முறையாகவும் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை என்று நம்பப்படுகின்றது.
ஆனால் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்ப்பில் ஜனாதிபதி ரணில் எந்த உத்தரவாதங்களையும் பசிலுக்குக் கொடுக்கவில்லை. ஆனால் நல்லவழியிலோ கெட்டவழியிலோ இதனை அடையும் ஒரு முற்சியில் ராஜபக்ஸாக்கள் இறங்கி இருப்பதால்தான் இப்படி ஒரு கதை பிறந்திருக்கின்றது.
மேலும் சில தினங்களுக்கு முன்னர் மொட்டுக் கட்சியில் இது பற்றி கருத்துப் பரிமாறல்கள் நடந்திருக்கின்றன. இந்தக் கூட்டம் முடிந்து வெளியே வந்த மஹிந்த ராஜபக்ஸாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பிய போது அவர் அன்று கொடுத்த பதில் சற்று வித்தியாசமாக இருந்தது.
நாம் இன்னும் ரணிலுடன் பயணிக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார். நாமல் தமது கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தும் என்று உறுதி கூறி இருக்கின்றார்.
இதன்படி பார்க்கின்ற போது இப்போது ரணிலை அச்சுறுத்தியாவது பொதுத் தேர்தலுக்கு போகும் ஒரு முயற்சியில் மொட்டுக் கட்சி இருக்கின்றது என்று தெரிகின்றது.
ஐ.ம.ச. பிரித்தானியாக் கட்சியா?
-நஜீப்-
டயனா: நிறையவே தகவல்கள் கைவசம். முடிந்தளவு சுருக்கமாகப் பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்னர் டயனா சமன்மலி என்ற ஒரு பிரித்தானியப் பிரசையின் சாரதிப் பத்திரம் சிக்கியது. இதை துருவிப் பார்த்த போது அதற்குச் சொந்தக்காரி டயனா கமகே என்ற சர்ச்சைக்கு உரிய பெண்.
அவர் இரட்டை பிரசா உரிமை பெற்றவர் என்று அப்போது நம்பப்பட்டது. இது பற்றி அவரிடம் ஒரு ஊடகச் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, தான் ஒரு தூய சிங்ளகப்-பௌத்தர் தனக்கும் பிரித்தானிய குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது தனக்கு சேறு பூசும் ஒரு கதை என அதனை நிராகரித்திருந்தார்.
ஆனால் ஓசல லக்மால் ஹேரத் என்பவர் இந்த விவகாரத்தை நீதி மன்றத்துக்கு கொண்டு சென்றார். அப்போது அவர் ஒரு பிரித்தானிய பிரசை மட்டும் என்று நீதி மன்றம் கண்டறிந்து. அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை இப்போது நீதி மன்றம் ரத்துச் செய்திருக்கின்றது.
அப்படிப்பட்டவர் இலங்கை தேர்தல் தினைக்களத்தில் (அபே ஜன பலவேகய) எங்கள் மக்கள் சக்தி என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்திருக்கின்றார். ரணிலுடன் முரண்பட்ட சஜித், தேர்தலில் நிற்பதற்கு அந்தக் கட்சியை விலைக்கு வாங்கி அதனை ஐக்கிய மக்கள் சக்தி என்று மாற்றி தேர்தலில் போட்டியிட்டார்.
நன்றிக் கடனாக டயனாவுக்கு எம்.பி பதவியும் சஜித் கொடுத்தார். அப்படியானால் இது பிரித்தானியருக்கு சொந்தமான ஒரு கட்சி தானே என்றும் விவாதிக்கலாம். இப்படி புரிதலில்லாத சஜித்தும் அவரது செயலாளர் மத்தும பண்டாரவும் எப்படி நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற விமர்சனங்கள்.
எனவே சஜித் கட்சி(ஐமக) நாடாளுமன்ற உறுப்புரிமைகள் சட்டரீதியானவையா என்று இப்போது வேறு விவாதம். அத்தோடு ஒரு வெளி நாட்டுப் பிரசை எப்படி இங்கு கட்சியைப் பதிவு செய்ய முடிந்தது. இவ்வளவு காலமும் டயனா விசா இன்றி இங்கு எப்படி தங்கி இருக்க முடிந்தது.
நன்றி: 12.05.2024 ஞாயிறு தினக்குரல்