இலங்கையில் “மக்கள் யாப்பு” என்ற வகையிலான அரசியலமைப்பை ஏற்படுத்துவதை முன்னிலைப்படுத்தி ,பிரபல “ராவய” பத்திரிகைக்கு கால் நூற்றாண்டு காலமாக ஆசிரியராக விளங்கிய விக்டர் ஐவன் மற்றும் டாக்டர் சைபுல் இஸ்லாம் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை (23) முற்பகல், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர் .அதனை மையப்படுத்தி முக்கிய சமகாலப் பிரச்சினைகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதில், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மற்றும் முன்னாள் மேல் மகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
பிரஸ்தாப “மக்கள் யாப்பு” அறிமுகப்படுத்தப்படுவதன் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்பாட்டாளர்கள் முக்கிய அரசியல் தலைவர்களைச் சென்று நேரில் சந்தித்து விளக்கமளித்துவருகின்றனர்.
தென்னாபிரிக்காவில் நிலவிய இன ஒதுக்களுக்கெதிராகக் குரல் கொடுத்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முயற்சியின் பயனாக ஏற்படுத்தப்பட்ட “மக்கள் யாப்பு” அநேக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.