தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிய முடிவு.!அதிர்ச்சியில் ரஜினி குடும்பம்.!!

மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷின் இந்த திடீர் முடிவால் ரஜினி குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்தை அறிவித்து வருவதால், என்ன காரணம் என புரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். நாகசைதன்யா – சமந்தா, இசையமைப்பாளர் இமான் ஆகியோர் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் இன்று தனுஷும் தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்துள்ளார்.

பிரபல டைரக்டரான கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா பல படங்களை டைரக்டர் செய்தும் வருகிறார்.

தனுஷின் பிரம்மாண்ட வீடு

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். சமீபத்தில் கர்ணன் படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றார். தனுஷ் தற்போது ரஜினி வீட்டிற்கு அருகே போயஸ் கார்டனில் மிக பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். விரைவில் இந்த வீட்டிற்கு கிரஹபிரவேசம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மனைவியை பிரிகிறார் தனுஷ்

ஆனால் அதற்கும் யாரும் எதிர்பாராத விதமாக தனது மனைவியை பிரிய போவதாக தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே தகவலை ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களின் இந்த திடீர் பிரிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் கேட்டு வருகின்றனர்.

18 ஆண்டு கால உறவு

தனுஷ் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 18 ஆண்டுகளாக நண்பர்கள், தம்பதி, பெற்றோர், நலம் விரும்பிகளாக இருவரும் இருந்தோம். இந்த பயணம் விட்டுக் கொடுத்தல், புரிதல், ஏற்றுக் கொள்ளல் என வளர்ந்தது.

இன்று இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். ஐஸ்வர்யாவும் நானும் தம்பதிகளாக இருப்பதில் இருந்து பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்களின் முடிவை மதித்து, எங்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சியில் ரஜினி குடும்பம்

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் முதல் திருமணமும் தோல்வி அடைந்தது. இதே போன்ற பிரச்சனைகளை அவரும் சந்தித்தார்.

முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற செளந்தர்யாவிற்கு சமீபத்தில் வசீகரனுடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது.

தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனது கணவர் தனுஷை பிரிய உள்ளதால் ரஜினி குடும்பத்தினர் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.

Previous Story

பாக்:படுகொலை  பிரியந்த  குடும்பத்திற்கு 1 00,000 அமெரிக்க டொலர்கள்

Next Story

அதிக முதலீடு செய்ய இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு