-நஜீப்-
அப்பா அப்பாவி!
தற்போது போலியான மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து நாட்டில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். பணம் கொள்ளையடித்தார், என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி இருக்கின்றார் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல.
அவர் தனக்கு சிங்கப்பூர் மருந்தும் தனியார் வைத்தியசாலை வசதியும் எதிர்பார்த்தாலும் அந்த சலுகைக்கு இடமில்லை என்று வைத்தியர்கள் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதுடன் அவருக்கு நாம் சாதாரண மக்களுக்கு கொடுக்கின்ற மருந்துகளையும் வசதிகளையும்தான் செய்து வருகின்றுறோம் என்று சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்ஹ தெரித்திருக்கின்றார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெல்லியவை நீதி மன்றத்துக்கு அழைத்து வருகின்றபோது அவரது அரசியல் சகாக்கள் எவரும் அங்கு வந்திருக்கவில்லை. இந்த நிலையில் அங்கு வந்திருந்த அவரது மகள் எனது அப்பா அப்பாவி என பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறி இருக்கின்றார்.
இதற்கிடையில் கண்டி-குண்டசாலையில் அவரது பெயரில் சுற்றுநிருபங்களுக்கு முரனாக அமைக்கப்பட்ட பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஜோசப் ஸ்டலின் கேட்டிருக்கின்றார்.
பொதுத் தேர்தல்!
ஜனாதிபதித் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் மேலோங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் ஆளும் மொட்டுக் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தவது என்ற விடயத்தில் தெளிவில்லாத நிலை இருந்து வருகின்றது. தற்போதய அரசியல் பின்னணியில் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினால் அது தமக்கு பாதிப்பாகவே அமையும் என்று மொட்டுக் கட்சியில் ஒரு தரப்பினர் கருதுகின்றார்கள்.
குறிப்பாக முன்பொரு முறை முதலில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு நாமல் ராஜபக்ஸ ஜனாதிபதி ரணிலிடம் தனிப்பட்ட ரீதியில் கேட்டிருந்தார். அதனை அன்று ரணில் நிராகரித்து பதவிக் காலம் நிறைவடையும் முன்னர் தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் என்று ஆளும் மொட்டுத் தரப்பு உறுப்பினர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி இருந்ததை அவர் நாமலுக்கு அப்போது நினைவுபடுத்தி இருந்தார்.
தற்போது இந்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊடாக விடுப்பதற்கு நாமலுக்கு நெருக்கமானவர்கள் அலுத்தம் கொடுப்பதாகத் தெரிகின்றது. நாமலுக்கு சற்றுப் பெருமை காக்குமாறு பிரசன்ன அறிவுரை வேறு கொடுத்து வருகின்றார். பொதுத் தேர்தலே அவர்கள் தமக்குப் பாதுகாப்பு என்று கருதுகின்றார்கள்.
யார் அழைத்தது!
தேசிய மக்கள் சக்தி மீது நாட்டில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்ற இந்த நாட்களில், அவர்களுடன் கூட்டணி போட்டுக் கொள்ள பல அரசியல் கட்சிகளும் முக்கியஸ்தர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு என்பிபி. தயாராக இல்லை.
இந்த நிலையில் சீ…சீ…இந்தப் பழம் புளிக்கும் என்று பல இடங்களில் இருந்து கதைகள் வருகின்றன. தம்மை அரசியல் ரீதியில் தீண்டப்படக் கூடாதவர்களாக தற்போது பார்ப்பதால், விமல்-கம்மன்பில போன்றவர்கள் தனித்து விடயப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் தாமும் தமது தரப்பிலிருந்து ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் களம் இறக்க இருப்பதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் விமல் வீரவன்ச தான் ஒரு போது ஜேவிபி. யுடன் கூட்டணிக்குப் போகப் போவதில்லை என்று ஒரு அறிவிப்பை விடுத்திருந்தார். இதற்குப் பதில் வழங்கிய ஜேவிபி. கட்சியின் செயலாளர் நாம் விமலை எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைக்கவே இல்லை.
நாம் அழைத்திருந்தால்தானே அவர் வரமுடியாது என்று கூற முடியும் என்று நெத்தியடிப் பதில் கொடுத்திருக்கின்றார் செலாளர் டில்வின் சில்வா.
சஜி-பொனி லடாய்!
சஜித் ஐ.ம.சக்தியில் வந்து இணைந்து கொள்வோர் எல்லோருக்கும் இடம். அதற்கான அதிகாரத்தை கட்சி சஜித்துக்கு வழங்கி இருக்கின்றது. அணுரகுமாரவின் என்பிபி. தமது அணிக்கு வருகின்றவர்கள் எல்லோரையும் எடுப்பதில்லை. அவர்கள் வடிகட்டித்தான் ஆட்களை உள்வாங்குகின்றனர்.
சஜித்தின் இந்த செயலைத் தான் ஒரு போதும் ஏற்க மாட்டேன் என பீல்ட் மார்ஷல் போர்கொடி. கடைசி வரை கோட்டாவுடன் இருந்து, ஊழல் பண்ணிய இராணுவத் தளபதி தயா ரத்நாயக்காவை அழைத்து அவருக்கு உயர் பதவிகளும் சஜித் கொடுத்தார். இவர்தான் தன்னை சிறைக்கு இழுத்துச் சென்று தள்ளியவர். அவருடன் நான் எப்படி இங்கு அரசியல் செய்ய முடியும்.
இது பொன்சேக்காவின் நியாயமான கோள்வி. டாக்டர் சாபியை போலிக் குற்றச்சாட்டை சொல்லி உள்ளே தள்ளிய சன்ன ஜயசுமனவும் இப்போது சஜிதுடன். இவர்களை வைத்துக் கொண்டு எப்படி பயணிப்பது? இது போன்ற இன்னும் பல வரவுகளால் சஜித் அணியில் பெரும் குழப்பம்.
பொன்சேக்காவை மட்டுப்படுத்த தயாவை உள்ளே கொண்டு வந்தது புட்நோர்ட் சுஜீவ சேனசிங்ஹ. தயாவை உள்வாங்கியதில் கட்சி செயலாளர் மத்தும பண்டாவுக்கும் பிடிப்பில்லையாம். இப்போது ஜனாதிபதி ரணிலுடன் இரகசிய சந்திபை நடாத்தி இருக்கின்றார் பீல்ட் மர்ஷல்.
நன்றி: 11.02.2024 ஞாயிறு தினக்குரல்