நான் ஏன் காந்தியை கொன்றேன்?

“படத்தை தடை செய்ய வேண்டும்”

வரும் 2022 ஜனவரி 30ஆம் தேதி வெளிவர உள்ள “நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?” திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? அதாவது Why I killed Gandhi இப்படியொரு திரைப்படம் தயாராகி, வரும் 2022 ஜனவரி 30 ஆம் தேதி வெளியிட இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன எனவும், இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆம் ஆண்டில் நாடும் நானிலமும் விழா நடத்திக் கொண்டிருக்கிறது.

குதூகலம் நடக்கும்போது காந்தி கொலைப் படமும் வெளியிட்டு, தனது குரூரத்தை உலகிற்குக் காட்டும் சக்திகள் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக நடந்து பழகிக் கொண்டிருக்கின்றன என கூறப்பட்டுள்ளது.

காதர் மொகிதீன் அறிக்கை

மேலும், சென்ற ஆண்டு இதே ஜனவரி 30இல் உத்தர பிரதேசத்தில் காந்தி பொம்மை செய்து, அதற்குள் இரத்தச் சிவப்பு சாயங்களைப் பூசி, அதை நடுத்தெருவில் வைத்து, போவோர் வருவோர் பார்க்கும்படியாக, பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, அதிலிருந்து இரத்தம் போன்ற சிவப்பு சாயம் ஓடச் செய்து, அந்த சிவப்பு சாயத்தை குருதி கொட்டுவதாக கைகொட்டிச் சிரித்து, சுடப்பட்ட காந்தி பொம்மையை காலில் போட்டு மிதித்து, ஒரு காளியாட்டம் நடத்தியதை ஒரு பெண் உருவில் நின்றதொரு ‘பேய்’ செய்தது என்று உலகமெங்கும் விளம்பரம் வந்தது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாத்ராம் கோட்ஸே

இந்த ஆண்டு & 2022 ஜனவரி 30இல் ”நான் ஏன் காந்தியைக் கொன்றேன்” என்று நாத்ராம் கோட்ஸே நீதிமன்றத்தில் கூறி, தான் செய்த படுபாதக பாவத்திற்கு நியாயம் கற்பித்ததைத் தலைப்பாகக் கொண்டு திரைப்படம் தயாரிக்கப்பட்டு அது வெளிவர இருக்கிறது என தனது அறிக்கையில் கூறியுள்ள காதர் மொகிதீன், இதுவும் மோடி சர்க்காரின் சாதனையாகக்கூட விளம்பரம் செய்யக்கூடும் என கூறியுள்ளார்.

சரத்பவார் கட்சி எம்.பி.

இதிலே மிகப் பெரும் வேதனை என்னவெனில் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்!’ என்ற திரைப்படத்தில் கோட்ஸே பாத்திரத்தில் நடித்திருப்பது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் பெயர் ‘அமோல் கோல்ஹே’ இவர் எந்தக் கட்சி எம்.பி. தெரியுமா? இந்திய தேசிய காங்கிரசில் மூத்த தலைவராக இருந்து, திருமதி சோனியா காந்தி இந்தியாவுக்குப் பிரதமர் ஆகக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரசை விட்டு வெளியேறி, தேசியவாதக் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியிருக்கும் சரத்பவார் அவர்களின் சீடர்தான் இந்த எம்.பி எனவும், இன்றைக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சி சரத்பவாரின் கட்சி என தனது அறிக்கையில் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

திரைப்படம் வெளியாகக் கூடாது1948 ஜனவரி 30ல் டில்லி பிர்லா மாளிகையில் மாலை 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மகாத்மா காந்தியார் அவர்களை நாத்ராம் கோட்ஸே மூன்று முறைச் சுட்டுக் கொன்றான் என தனது அறிக்கையில் கூறியுள்ள காதர் மொகிதீன், காந்தீயத்தை யாரும் கொல்ல முடியாது!

காந்தியம் & அவர் போதித்த சாத்வீகம், சத்தியம், சத்தியாகிரகம், சமய நல்லிணக்கம் நாட்டில் என்றும் இருக்கிறது என்பது உண்மையானால் தேசப் பிதா பற்றிய திரைப்படம் வெளிவரக் கூடாது எனவும், மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசும் இந்தத் திரைப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வெறுப்பு சமூக வலைத்தளங்களில் பரவுவது எப்படி?

Next Story

புதிய அரசமைப்புச் சட்டம்! அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்