தாக்குதலுக்கு உத்தரவிட்டவரே  கோட்டபாயதான் – விமல் வீரவன்ச

கடந்த 9ஆம் திகதியன்று, அலரிமாளிகையில் இருந்து புறப்பட்டவர்கள், காலிமுகத்திடலுக்கு தாக்குதல் நடத்த செல்லும்போது அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே இடமளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதனை மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னக்கோனே கூறியிருப்பதாக விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

தேசபந்து தென்னக்கோன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அளித்த சாட்சியத்தின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இருந்து காலிமுகத்திடலுக்கு தாக்குதல்களை நடத்த சென்ற குழுவினரை கண்ணீ்ர் புகைப்பிரயோகம் செய்து நிறுத்துவதற்கு தென்னக்கோன் நடவடிக்கை எடுத்தபோதும், ஜனாதிபதியே அந்த குழுவினரை காலிமுகத்திடலுக்கு செல்ல அனுமதித்ததாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இதன்போது பொலிஸ் மா அதிபர், தென்னக்கோனுடன் தொடர்கொண்டு வினவியபோது, ஜனாதிபதியின் உத்தரவை தென்னக்கோன் அவரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து தேசபந்து தென்னக்கோன், பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டபோது, இது அண்ணன்- தம்பி பிரச்சினை.

எனவே பொலிஸாரை தெரியாதது போன்று (சேப்) இருக்குமாறு கேட்டுக்கொண்டதாக தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எனவே நாட்டில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று விமல் வீரவன்ச கேட்டுக்கொண்டார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று லொத்தரில் பாரிய பரிசு கிடைத்துள்ளது என்று தெரிவித்த விமல் வீரவன்ச, இன்றும் பசில் ராஜபக்சவின் செயற்பாடு தொடர்வதை இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வுகளின்போது தெரிந்துக்கொள்ளமுடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

அவரை நாடாளுமன்றத்தில் பிளவுகளை ஏற்படுத்துகிறார் என்றும் விமல் வீரவன்ச  குற்றம் சுமத்தினார்.

 

 

Previous Story

அரசியல்வாதிகளின் கையாட்கள், பிரதேச பொஸ்களில் அதிகரிகள்! அப்ப …!

Next Story

ஞானவாபி மசூதி: தொழுகையை தொடரலாம்– உச்ச நீதிமன்றம்